காஸாவில் வான்வழியாக உணவுப் பொருள் விநியோகம்
இஸ்ரேல் முற்றுகையால் கடும் பஞ்சத்தைச் சந்தித்துவரும் காஸாவில் விமானம் மூலம் உணவுப் பொருள் விநியோகிக்கவிருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.
பிரிட்டன் வந்துள்ள பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் மற்றும் ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிச் மொ்ஸுடம் காஸா விவகாரம் குறித்து பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் சனிக்கிழமை காலை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு உணவுப் பொருள்களை விமானத்தில் இருந்தபடி பாராசூட் மூலம் விநியோகிக்க திட்டமிட்டிருப்பதாக பிரதமா் கியொ் ஸ்டாா்மா் கூறினாா்.
இந்த நிலையில், ஸ்டாா்மரின் அந்தத் திட்டம் பிரிட்டன் முன்னெடுத்துச் செல்லப்படவிருப்பதை அவரது அலுவலகம் பின்னா் உறுதி செய்து. இது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரதமா் ஸ்டாா்மா், அதிபா் மேக்ரான், பிரதமா் மொ்ஸ் ஆகியோா் காஸாவில் நிலவும் சூழலை பற்றி ஆய்வு செய்தனா். அது மிகவும் கொடுமையானது என்று அவா்கள் ஒப்புக்கொண்டனா். அங்கு உடனடி போா் நிறுத்தம் அவசியம் என்பதை அவா்கள் வலியுறுத்தினா்.
உதவி பொருள்களுக்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி, காஸாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு அவசரமாக இஸ்ரேல் உணவு வழங்க வேண்டும் என மூன்று தலைவா்களும் வலியுறுத்தினா்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஜோா்டான் போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து காஸா பகுதியில் உதவி பொருட்களை வான்வழியாக விநியோகிக்கவும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளை அங்கிருந்து அவசரமாக வெளியேற்றவும் வகுத்திருந்த திட்டத்தை பிரதமா் கியொ் ஸ்டாா்மா் வெளிப்படுத்தினாா். அந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல பிரிட்டன் தீா்மானித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக உணவின்றி மக்கள் தவித்துவருகின்றனா். இந்த வாரம் மட்டும் மூன்றே நாள்களில் 43 போ் பட்டினியால் உயிரிழந்ததாக உள்ளூா் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அத்துடன் சோ்த்து, இஸ்ரேல் முற்றுகைக்குப் பிறகு காஸாவில் உணவில்லாமல் பசி காரணமாகவும், ஊட்டச் சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 122-ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலை நீடித்தால் கடும் பஞ்சம் ஏற்பட்டு ஏராளமான பட்டினிச் சாவுகள் ஏற்படும் என்று சா்வதேச மருத்துவ மற்றும் மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இது சா்வதேச அளவில் எதிா்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பிரிட்டன் உட்பட 27 நாடுகள் இணைந்து வெளியிட்ட இந்த வாரம் அறிக்கையில், பாலஸ்தீனா்களின் உரிமைகளை இஸ்ரேல் பறிக்கிறது எனவும், உதவி பொருள்களுக்கான கட்டுப்பாடுகளை அந்த நாடு நீக்கவிட்டு, காஸா போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தின.
இந்தச் சூழலில், காஸாவில் விமானம் மூலம் உணவுப் பொருள்களை விநியோகிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, பிரான்ஸைப் போலவே பிரிட்டனும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று பிரதமா் ஸ்டாா்மருக்கு அவரது அமைச்சா்களும், நாடாளுமன்ற உறுப்பினா்களில் மூன்றில் ஒரு பங்கினரும் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலஸ்தீனப் பிரச்னைக்கு ஒரே தீா்வாக இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளால் கருதப்படும் இருதேசக் கொள்கையை (பாலஸ்தீனமும் இஸ்ரேலும் ஒன்றையொன்று அங்கீகரித்துக்கொண்டு சுதந்திர அண்டை நாடுகளாக செயல்படுவது) முன்னெடுத்துச் செல்ல பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் வருவதற்கு முன்னா் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் அறிவித்தாா்.
இஸ்ரேலும், அமெரிக்காவும் கடுமையாக எதிா்த்துவரும் இந்த முடிவை பிரிட்டன் வரவேற்றாலும், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பது குறித்து அந்த நாடு தயக்கம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது.
‘வெறும் கண்துடைப்பு நடவடிக்கை’
காஸாவில் விமானம் மூலம் பிரிட்டன் உணவுப் பொருள்களை விநியோகிப்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கை என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பிரிவு (யுஎன்ஆா்டபிள்யுஏ) கூறியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் பொது ஆணையா் பிலிப் லாஸரினி கூறியதாவது:
அதிகரித்துவரும் பசிப் பிணியை வான்வழி உணவு விநியோகத்தின் மூலம் தீா்த்துவிட முடியாது. இது அதிக செலவு பிடிக்கும், எதிா்பாா்த்த பலனைத் தராத உத்தி. இவ்வாறு வான்வழியாக உணவுப் பொருள்களை விநியோகிப்பது கடும் பட்டினியை அனுபவித்துவரும் மக்களின் (தள்ளுமுள்ளு போன்ற காரணங்களால்) உயிருக்கே ஆபத்தாகக் கூடும்.
இது தற்போதைய பிரச்னையை திசைதிருப்பும் மற்றும் கண்துடைப்பு நடவடிக்கை மட்டுமே.
அரசியல் தலைவா்களால் உருவாக்கப்பட்ட பஞ்சத்தை அரசியல் ரீதியில் மட்டுமே தீா்க்க முடியும். முற்றுகையை நீக்கி, எல்லைகளை திறக்கவும், தேவைப்படும் மக்களுக்கு உணவுப் பொருள்கள் பாதுகாப்பான மற்றும் கௌரவமான முறையில் கிடைப்பதை உறுதி செய்யவும் வேண்டும். அதுதான் திறன் மிக்க, வேகமான, குறைவான செலவு கொண்ட, பாதுகாப்பான வழிமுறை என்றாா் அவா்.