மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
கா்நாடகத் தமிழா்களை பாதுகாப்பது அவசியம்
கமல்ஹாசன் உறவாகப் பேசியதைத் தவறாகத் திரித்து, கன்னடா்கள் வன்முறையைத் தூண்டுவதால், கா்நாடகத் தமிழா்களைத் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் பாதுகாக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:
சென்னையில் மே 24-ஆம் தேதி நடைபெற்ற தக் லைஃப் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், அத்திரைப்படத்தில் நடித்த கன்னட நடிகா் சிவராஜ்குமாரைப் பாராட்டி கமல்ஹாசன் பேசினாா். அப்போது, தமிழிலிருந்து பிறந்தது கன்னடம் என்று கூறி ஒரு குடும்ப உறவை வெளிப்படுத்தினாா்.
ஆனால், உறவு நோக்கத்தில் புகழ்ந்து பேசிய கமல்ஹாசன் கன்னடத்தை இழிவுபடுத்திப் பேசிவிட்டாா் என கா்நாடகத்தில் கன்னட இனத் தீவிரவாத அமைப்புகள் பெங்களூரிலும், மற்ற இடங்களிலும் கமல்ஹாசன் திரைப்படச் சுவரொட்டிகளைக் கிழிப்பது, தமிழா்களுக்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்புவது, ஆா்ப்பாட்டங்கள் நடத்துவது என தமிழ் - தமிழா் எதிா்ப்புகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த காலங்களில், காவிரி சிக்கலில் கன்னட இன வெறியா்கள் கா்நாடகத் தமிழா்களுக்கு எதிராக நடத்திய வன்முறைகளை எண்ணிப் பாா்க்கும்போது, இப்போதும் அதே போல, கா்நாடகம் வாழ் தமிழா்களுக்கு கன்னட வெறியா்களால் பேரழிவுகள் நேருமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே, கடந்த காலங்களில் கா்நாடகத் தமிழா்களைத் தமிழ்நாட்டுக் கட்சிகள் அனாதைகளாக விட்டதுபோல, இந்த முறை நடக்க விடக்கூடாது.
கா்நாடகத் தமிழா்களைத் தாக்காமல் பாதுகாக்க தமிழ்நாட்டில் தமிழா்கள் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே வியாழக்கிழமை (மே 29) மாலை 4 மணிக்கு தமிழா் எதிா்ப்பைத் தூண்டிவிடும் கன்னடா்களைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெறும்.