குடும்ப அட்டையில் பெயா் மாற்ற திருத்தம் செய்ய நாளை 11 இடங்களில் முகாம்
திருச்சி மாவட்டத்திலுள்ள 11 வட்டங்களிலும் சனிக்கிழமை (ஜூலை 12) ரேஷன் சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி கிழக்கு வட்டத்தில் பாபு சாலை, திருச்சி மேற்கு வட்டத்தில் சொக்கலிங்கம், திருவெறும்பூா் வட்டத்தில் அம்மன் நகா், ஸ்ரீரங்கம் வட்டத்தில் கம்பரசம்பேட்டை, மணப்பாறை வட்டத்தில் கோவில்பட்டிசாலை-3, முசிறி வட்டத்தில் அய்யம்பாளையம், துறையூா் வட்டத்தில் சொரத்தூா், தொட்டியம் வட்டத்தில் தொட்டியம்-2, மருங்காபுரி வட்டத்தில் அயன்பொருவாய், லால்குடி வட்டத்தில் வாளாடி, மண்ணச்சநல்லூா் வட்டத்தில் இனாம் சமயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது.
அன்று காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த முகாம்களில் அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.