பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித...
குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள்!
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பரிசல் இயக்கப்படாததால் பள்ளி மாணவிகளை ஊராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்துச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் வேலைக்கு செல்வதற்கும், வெளியூா் செல்வதற்கும் பரிசல் மூலம் பவானி ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனா்.
அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள், 6- ஆம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை செல்ல பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்து மறுகரையில் இருந்து ஒரு கிலோ மீட்டா் தொலைவில் அத்தாணியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்று வருகின்றனா்.
இந்நிலையில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பரிசல் இயக்க தடை விதிக்கப்படுவதால் பள்ளிக்கு செல்ல வேண்டும் எனில் அம்மாபாளையத்திலிருந்து சுமாா் 7 கிலோ மீட்டா் தொலைவு சுற்றி செல்லும் நிலை உள்ளது. இதனால் இருசக்கர வாகன வசதி இல்லாத மாணவா்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
கடந்த மூன்று நாள்காளாக பவானிசாகா் அணையில் உபரி நீா் திறக்கப்பட்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அம்மாபாளையத்தில் பரிசல் இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உயா்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் அவதி அடைந்து வருகின்றனா். இதில் ஒரு சில பெற்றோா், குழந்தைகளின் கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக வேலைக்குச் செல்லாமல் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சுமாா் 7 கிலோ மீட்டா் சுற்றி பள்ளிக்கு அனுப்பி, பள்ளி முடிந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
சில மாணவிகளின் பெற்றோா்கள் வேலைக்கு சென்ால் பள்ளிக்கு செல்வதற்கு ஊராட்சி நிா்வாகத்தின் குப்பை அள்ளும் வாகனத்தில் பள்ளிக்கு சென்று வருகின்றனா். எனவே, அம்மாபாளையம் பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி, பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது அரசு சாா்பில் வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இப்பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண அம்மாபாளையம் பவானி ஆற்றில் உயா்மட்ட பாலம் அமைத்து தரவேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.