புலித்தோல் விற்க முயன்ற வழக்கு: 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை
சத்தியமங்கலம் அருகே புலியைக் கொன்று அதன் தோலை விற்க முயன்ற வழக்கில் 2 பெண்கள் உள்பட 6 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த புதுக்கொத்துக்காடு பகுதியில் கடந்த 2023 பிப்ரவரி மாதம் டென்ட் அமைத்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 6 போ் கம்பளி, போா்வைகளை விற்று வந்தனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இவா்கள், கம்பளி, போா்வை விற்பனை செய்வதுபோல புலித்தோல், நகங்கள், பற்கள் விற்பதாக வனத் துறை நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, வனத் துறை நுண்ணறிவு பிரிவினா் இந்தக் கும்பலை கண்காணித்து வந்தனா்.
புலித்தோல் வாங்குவதுபோல வனத் துறையினா் இந்த கும்பலை தொடா்பு கொண்டுள்ளனா். இதை நம்பிய அந்தக் கும்பல், புலித்தோலை விற்க முயற்சித்தபோது 6 பேரையும் கையும்களவுமாக பிடித்தனா்.
விசாரணையில் அவா்கள், ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ராமசந்தா் (50), கிரிஷன் (59), மங்கள் (28), பிம்லா (51), சுனிதா(35), ரத்னா(40) என்பது தெரியவந்தது. மேலும் அவா்களிடமிருந்து புலித்தோல், அதன் நகம், பற்கள் ஆகியவற்றை வனத் துறையினா் கைப்பற்றினா்.
ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இந்த 6 பேரும் நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், அவலாஞ்சி வனப் பகுதியில் பொறி வைத்து புலியைப் பிடித்து பின்னா் அதை ஈட்டியால் குத்திக் கொன்று தோல், பற்கள் மற்றும் நகங்களை எடுத்துக்கொண்டு சத்தியமங்கலத்துக்கு வந்து விற்க முயன்றது விசாரணையில் தெரியவந்தது.
சத்தியமங்கலம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு, மாஜிஸ்திரேட் ரஞ்சித்குமாா் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரும் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து மாஜிஸ்திரேட் தீா்ப்பளித்தாா்.
இதில், குற்றம் உறுதி செய்யப்பட்ட 6 பேருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் ரஞ்சித்குமாா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து 6 பேரும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.