Train: தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயம்; IRCTC கொண்டுவந்த புதிய வி...
குமுளி பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
தேனி மாவட்டம், குமுளியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழக- கேரள எல்லையான குமுளி பகுதியிலிருந்த அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனை, பேருந்து நிறுத்தம் சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இந்தப் பேருந்து நிலையம் மூடப்பட்டு, சாலையோரத்திலே பேருந்துகள் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்றனா். இந்தப் பகுதியில் சுகாதார வளாகமின்றி பெண்கள் உள்ளிட்டோா் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே, தமிழகத்திலிருந்து அதிகளவில் கேரளத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு அனைத்து வசதியுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், ரூ.5.50 கோடியில் புதிய பேருந்து நிலையம், அதனுடன்கூடிய பணிமனை, கடைகள், உணவகம், தங்கும் விடுதி, சுகாதார வளாகம் அமைக்கத் திட்டமிட்டு பணிகள் தொடங்கின. தற்போது, 80 சதவீத பணிகள் முடிந்து விட்டன. அண்மைக்காலமாக இங்கு பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, குமுளி பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.