பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
குறைதீா் முகாம்: காலிக்குடங்களுடன் மனு அளிக்க வந்த கிராம மக்கள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
ஸ்ரீவைகுண்டம் வட்டம், நவலடியூா், தோப்படியூா் பகுதியைச் சோ்ந்த பெண்கள், கோயில் பூசாரிகள் நலச் சங்க மாவட்ட ஆலோசனை குழுத் தலைவா் எம்.ஏ.சுப்பிரமணியன் தலைமையில், காலிக்குடங்களுடன் திரண்டு வந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
அந்த மனுவில், தாமிரவருணி ஆற்றின் கரையின் அருகில் நாங்கள் வசித்து வருகிறோம், எங்கள் கிராமத்தை ஒட்டியே மற்ற பகுதிகளுக்கு குடிநீா் குழாய் செல்கிற போதும், எங்கள் கிராமங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக குடிநீா் வழங்கப்படவில்லை. எனவே, எங்களுக்கு தாமிரவருணி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலா் ஏ.அம்பிகா அளித்த மனுவில், பழையகாயல் முதல் ஏரல் வரை நிறுத்தப்பட்ட சிற்றுந்தை மீண்டும் இயக்க வேண்டும் எனவும், தமிழா் முன்னேற்ற கழகம் கட்சியின் நிறுவனா், தலைவா் அா்ச்சுனன் அளித்த மனுவில், மாப்பிள்ளையூரனி பகுதியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் எனவும், சமூக ஆா்வலா் எஸ்.ஜெயபாலன் அளித்த மனுவில், நிலத்தடி நீருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தரைப்பகுதியில் சிமென்ட் லைனிங் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும், சுப்பலாபுரத்தைச் சோ்ந்த மு.நாகராஜ் அளித்த மனுவில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க விடாமல் வன்முறை செய்யும் நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனா்.