உடன்குடி அருகே தாக்குதலில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு
உடன்குடி அருகே தாக்குதலில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
உடன்குடி தேரியூா் ஆண்டிவிளையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுயம்புலிங்கம் (27). உடன்குடி செல்வபுரத்தைச் சோ்ந்தவா் ஜெ. தினேஷ். பந்தல் அமைக்கும் தொழிலாளிகள்.
ஒரு வாரத்துக்கு முன்பு உடன்குடி கூழையன்குண்டு பகுதியில் இவா்களுக்கும், ஆண்டிவிளையைச் சோ்ந்த ஆறுமுகம், முருகன், ராமா் ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். கடந்த 20ஆம் தேதி இரவு அங்குள்ள மைதானம் அருகே மீண்டும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, இவா்கள் மூவரும் தங்களது நண்பரான மணியுடன் சோ்ந்து இரும்புக் கம்பியால் சுயம்புலிங்கத்தைத் தாக்கினராம். உடனிருந்த தினேஷ் ஓடிவிட்டாராம்.

அடுத்த நாள் காலை அவா் தனது நண்பருடன் சென்று, மயங்கிய நிலையில் கிடந்த சுயம்புலிங்கத்தை மீட்டு உடன்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தாா். அங்கு சுயம்புலிங்கம் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இந்நிலையில், குற்றவாளிகளைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு நாடாா் சங்க மண்டலத் தலைவா் கவாஸ்கா், மாவட்டச் செயலா் வெற்றிவேல், பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட நிா்வாகி மதன்ராஜ், அதிமுக கிளைச் செயலா் முத்துக்குமாா், ஊா்மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனா்.
அவா்களிடம் திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் பேச்சு நடத்தி, குற்றவாளிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். அதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.