செய்திகள் :

குழந்தை நீ.. உனக்கு என்ன தெரியும்? தேஜஸ்வி கேள்விக்கு நிதிஷ் குமார் பதில்!

post image

பிகார் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவின் கேள்விக்கு முதல்வர் நிதிஷ் குமார் காட்டமாக பதிலளித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைக்கு வெளியே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு உடையில் வருகைதந்தனர்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறை குறித்து எழுப்பிய கேள்விக்கு, நிதிஷ் குமார் காட்டமாக பதிலளித்தார்.

தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:

”மக்களவை தேர்தலுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது திருத்தம் செய்யப்பட்டிருக்கலாம். தற்போது அவசரப்படுத்துவது ஏன்?

ஏழை மக்களிடம் இல்லாத 11 ஆவணங்களை கோருகின்றனர். 25 நாள்களில் இந்த ஆவணங்களை எல்லாம் மக்கள் எப்படி பெறுவார்கள். இந்த செயல்முறை ஏழை எளிய மக்களின் வாக்குரிமையைப் பறிக்கிறது.” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாநிலங்களவையில் பெறப்பட்ட தரவுகளை மேற்கோள்காட்டி பேசிய தேஜஸ்வி, “எங்கள் கட்சி மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, 3 கோடிக்கு அதிகமான பிகாரிகள் வெளி மாநிலங்களில் வேலை செய்வதாக பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு பதிலளித்துள்ளது.

சுமார் 4.3 கோடி பிகாரிகள் வேலைவாய்ப்பு மற்றும் பிற காரணங்களுக்காக வெளி மாநிலங்களில் வசிக்கின்றனர். அவர்கள் தேர்தலின்போது திரும்புவார்கள், ஆனால் அவர்களை தேர்தல் ஆணையம் நீக்கும் அச்சம் நிலவுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். கடந்த தேர்தலில் வாக்களித்தவர்கள் போலியானவர்களா? நிதிஷ் குமார் முதல்வரானது போலி என்று அர்த்தமா? நரேந்திர மோடி இப்படிதான் பிரதமர் ஆனாரா?” எனப் பேசினார்.

இதற்கு காட்டமாக பதிலளித்து நிதிஷ் குமார் பேசியதாவது:

"உங்கள் பெற்றோர் முதல்வர்களாக இருந்தபோது, மாநிலத்தின் அப்போதைய நிலைமை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சிறப்பாக பணியாற்றவில்லை என்றுதான் உங்கள் கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.

விரைவில் தேர்தல் வரவிருக்கிறது. மக்கள் என்ன செய்தார்கள் என்று யோசிப்பார்கள். எங்கள் அரசு மக்களுக்காக நிறைய பணிகளை செய்துள்ளது. பெண்கள், முஸ்லிம் மக்களுக்காக நிறைய பணிகளைச் செய்துள்ளோம். நீ குழந்தை, உனக்கு என்ன தெரியும்? பாட்னாவில்கூட மாலை நேரங்களில் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாது நிலை இருந்தது.” எனத் தெரிவித்தார்.

பிகாரில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பிறப்புச் சான்றிதழ், குடியிருப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட 11 ஆவணங்களை வாக்காளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Chief Minister Nitish Kumar has given response to a question from Leader of the Opposition Tejashwi Yadav in the Bihar Assembly.

இதையும் படிக்க : நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது! எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைப்பு!

தில்லியில்... ஷேக் ஹசீனா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து!

தில்லியில், வங்கதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் ந... மேலும் பார்க்க

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-... மேலும் பார்க்க

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க

ஆலப்புழாவில் அச்சுதானந்தன் உடல்! 150 கி.மீ. கடக்க 22 மணிநேரம்!

திருவனந்தபுரத்தில் நேற்று முற்பகல் புறப்பட்ட கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம், 22 மணிநேரத்துக்கு பிறகு ஆலப்புழாவுக்கு வந்தடைந்தது.கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தல... மேலும் பார்க்க