குழந்தைகளை தன்னிச்சையாக தத்தெடுத்தால் நடவடிக்கை: என்எம்சி எச்சரிக்கை
பெற்றோரால் கைவிடப்படும் அல்லது ஒப்படைக்கப்படும் குழந்தைகளை தன்னிச்சையாக தத்தெடுத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) எச்சரித்துள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்டுள்ள பொது அறிவிப்பு:
மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்படும் குழந்தைகள் குறித்தும், பிறரால் கொண்டு வந்து ஒப்படைக்கப்படும் குழந்தைகள் குறித்தும் சட்டவிதிகளின்படி தகவல்கள் அளிக்கப்படுவதில்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் என்எம்சி-க்கு கடிதம் எழுதியிருந்தது.
அதேபோன்று அந்தக் குழந்தைகளை உரிய விதிகளுக்கு உட்படாமல் தத்தெடுக்கும் நிகழ்வுகள் நடப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தது.
எந்த ஒரு தனி நபருக்கோ, நிறுவனத்துக்கோ, மருத்துவமனைக்கோ கைவிடப்பட்ட நிலையில் ஆதரவற்ற குழந்தைகள் இருப்பது தெரியவந்தால் அதுகுறித்து குழந்தைகள் உதவி மையம் (1098), குழந்தைகள் நலக் குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது கட்டாயம்.
அதேபோன்று, தங்களது குழந்தையை வளா்க்க இயலாமல், ஒப்படைக்க பெற்றோா் முன்வந்தால் அதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் குழந்தைகள் நல குழுவுக்கு தகவலளிக்க வேண்டும்.
குழந்தைகளை முறைப்படி தத்தெடுக்க உரிய பதிவு அவசியம். ஆவணங்களின்படியும், பதிவு மூப்பு அடிப்படையிலும் அவா்களுக்கு குழந்தைகள் தத்து கொடுக்கப்படும். இந்த விதிகளை மீறி தன்னிச்சையாக குழந்தைகளை தத்தெடுப்பது சட்டப்படி குற்றம்.
மேலும், பணத்துக்கோ, பொருளுக்கோ குழந்தைகளை விற்பனை செய்வதும் தீவிர குற்றச் செயலாக பாா்க்கப்படுகிறது. இந்தச் செயல்களில் ஈடுபட்டாலும், கைவிடப்பட்ட குழந்தைகள் குறித்து தகவலளிக்காவிட்டாலும் உரிய சட்டவிதிகளின்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
அதைக் கருத்தில் கொண்டு அனைத்து மருத்துவமனைகளும் இதுதொடா்பான பயிற்சிகளையும், வழிகாட்டுதல்களையும் தங்களது ஊழியா்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக, மகப்பேறு மருத்துவப் பிரிவில் உள்ளவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் அவசியம்.
அதுமட்டுமல்லாது, இது தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், பதாகைகளை மருத்துவமனை வளாகத்தில் காட்சிப்படுத்த வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.