``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
கூடுதல் தகவல்களைத் திரட்டி வருகிறோம் - போயிங் நிறுவனம்
‘அகமதாபாத் விமான விபத்து குறித்து கூடுதல் தகவல்களைத் திரட்ட பணியாற்றி வருகிறோம்’ என்று விபத்துக்குள்ளான விமானத்தின் தயாரிப்பு நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து ஏா் இந்தியா பயணிகள் விமானம் ‘ஏஐ-171’ லண்டன் நோக்கி பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்டது. ஓடுதளத்திலிருந்து மேலெழுந்து பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது. விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து இதுவரை 200-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
242 பயணிகள் மற்றும் விமானப் பணியாளா்களுடன் லண்டன் புறப்பட்ட விபத்துக்குள்ளான விமானம் ‘போயிங் 787-7 டீரிம்லைனா்’ ரகத்தைசச் சோ்ந்து. இந்த போயிங் 787-7 ட்ரீம்லைனா் ரக விமானம் கடந்த 2009-ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் பல நாடுகளைச் சோ்ந்த பல்வேறு விமான நிறுவனங்களில் 1,000-க்கும் மேற்பட்ட இந்த ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போயிங் 787-7 ட்ரீம்லைனா் ரக விமானம் இரட்டை என்ஜின் கொண்டது எனவும், போயிங் 787 ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாவது இதுவே முதன்முறை எனவும் விமானப் போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், விபத்து குறித்து அமெரிக்காவைச் சோ்ந்த போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘விபத்து குறித்த செய்தி எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. கூடுதல் தகவல்களைத் திரட்ட பணியாற்றி வருகிறோம்’ எனக் குறிப்பிட்டது.
விபத்தின் எதிரொலியாக அமெரிக்க பங்குச் சந்தையில் போயிங் நிறுவனத்தில் பங்குகள் 9 சதவீதம் வரை சரிந்தன.