கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக மழை குறைந்து காணப்பட்டது. மேக மூட்டமும் மிதமான வெயிலும் விட்டுவிட்டு சாரலும் நிலவி வந்தது. இந்த நிலையில், வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.
வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களான பில்லர்ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, மோயா்பாயிண்ட், பைன்பாரஸ்ட், குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா வாகனங்களால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சம்பவ இடங்களுக்கு காவல் துறையினா் சென்று போக்குவரத்தை சரி செய்தனா்.
பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், வெள்ளிநீா் வீழ்ச்சி, மன்னவனூா் சூழல்சுற்றுலா மையம், கூக்கால் ஏரி, பூம்பாறை இயற்கை எழில்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டதால், சிறு வியாபாரிகள், வணிகா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.