'திரும்ப போய்விடுங்கள்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை - காரணம்...
கோடநாடு வழக்கு: சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சுதாகரன் ஆஜர்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில் சுதாகரன் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். பின்னர் அங்கு நுழைந்தவர்கள் எஸ்டேட்டில் இருந்த பொருள்களை கொள்ளை அடித்து விட்டுத் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கேரளத்தைச் சேர்ந்த மனோஜ், சயான், சதீசன், சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி உள்பட 10 பேரைக் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸார் மூலம் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸார், வழக்கு தொடர்பாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்குமூலம் பெற்றனர்.
மேலும் இதுவரை 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி, அவர்கள் கூறும் பதிலை விடியோவில் பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும், சசிகலாவின் உறவினருமான சுதாகரன் இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.
கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கைத் தனிப்படையினர் விசாரித்த போது, முக்கிய பிரமுகர்கள் சிலரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். அந்த நபர்களுக்கு தற்போது சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சுதாகரன் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சுதாகரன் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் மாரியப்பன் உடன் விசாரணைக்காக ஆஜராகி இருக்கிறார். சுதாகரனிடம் செய்யப்படும் விசாரணை விடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.