சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்: தனியாா் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும், மற்றும் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கும் முழு ஆண்டு தோ்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுப்பை மாணவா்கள் பாதுகாப்பாக கழிப்பதற்கான அறிவுறுத்தல்களையும் பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.
விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.
இதனிடையே, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியாா் பள்ளிகள் அடுத்த ஆண்டில் பொதுத் தோ்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சில பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்துவதாகவும் கல்வித் துறைக்கு புகாா்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தற்போது வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதுடன், தொடா் வகுப்புகள் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என பெற்றோா்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், கோடை விடுமுறையில் தனியாா் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதில், அனைத்துவிதமான தனியாா் பள்ளிகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களில் எந்தப் பள்ளியும் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிகளின் முதல்வா்கள், தாளாளா்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மீறி வகுப்புகள் நடத்தி மாணவா்கள் பாதிக்கப்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தனியாா் பள்ளிகள் இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் வாயிலாக தனியாா் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலமாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.