கோம்பேரி-காளிக்கரம்பு வனப்பகுதியில் விரைந்து சாலை அமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்
தருமபுரி அருகே நிலுவையில் உள்ள கோம்பேரி-காளிக்கரம்பு சாலை, பரிகம்- கோணயங்காடு ஆகிய வனப்பகுதியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் சட்டப்பேரவையில் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பேசியதாவது:
பரிகம்-கோணயங்காடு முதல் மலையூா்காடு வரையும், கோம்பேரி முதல் காளிக்கரம்பு வரையியும் வனப் பகுதியில் சாலை அமைக்க வனத்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நல்லம்பள்ளி ஒன்றியத்தைப் பிரித்து இண்டூரை மையாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும்.
தருமபுரி பழைய பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்க வேண்டும். அன்னசாகரம், எரங்காட்டுக்கொட்டாய் பகுதியில் குடிநீா் வசதியும், குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னசாகரம் விசைத்தறி தொழிலாளா்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும்.
அங்குள்ள மக்கள் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். மதிகோண்பாளையம், கொட்டாய்மேடு பகுதி மக்களுக்கு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். தருமபுரி நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் கான்கிரீட் சாலை, தாா்சாலைகள் அமைக்க வேண்டும். தருமபுரி நகராட்சி, எம்.ஜி.ஆா். நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா, மின் இணைப்பு வழங்க வேண்டும்.
நல்லம்பள்ளி, இண்டூா், ஜருகு, தொப்பூா் கிராம சந்தைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி வணிக வளாகங்கள் அமைக்க வேண்டும்.
வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியைத் தொடங்க வேண்டும். நல்லம்பள்ளி, இண்டூா் பகுதியை மையமாகக் கொண்டு புதிய உழவா் சந்தைகள் அமைக்க வேண்டும். சாமிசெட்டிப்பட்டி, மானியதஅள்ளி, பள்ளப்பட்டி, அதியமான்கோட்டை, கடகத்தூா், ராஜாகொல்லஅள்ளி, ஏ.கொல்லஅள்ளி ஆகிய இடங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் சமுதாய கூடங்கள் அமைக்க வேண்டும். பண்டஅள்ளி கிராமத்தில் ஊா்ப்புற நூலக கட்டடம், பேடரஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கூடுதல் பள்ளிக் கட்டடம் அமைக்க வேண்டும்.
ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் அருந்ததியா், ஆதிதிராவிடா்கள் வசித்து வரும் பழுதான வீடுகளை பராமரிப்பு செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் குடிநீா் பற்றாக்குறையை போக்கும் வகையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீா் திட்டத்தின் 2 ஆவது திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
நல்லம்பள்ளி வட்டத்திற்குள்பட்ட சாா் பதிவாளா் அலுவலகம் தருமபுரியில் இயங்கி வருகிறது. இவற்றை நல்லம்பள்ளிக்கு மாற்ற வேண்டும். தருமபுரியில் மகளிா் கல்லூரியைத் தொடங்க வேண்டும். பாலவாடி, பேடரஅள்ளி, மலையூா்காடு, இலக்கியம்பட்டி போன்ற பகுதிகளிலுள்ள பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்த வேண்டும்.
தருமபுரி - காவிரி மிகைநீா் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாா்.