தினமும் உணவளிக்கும் மனித முகங்களை காக்கைகள் நினைவில் வைத்திருக்குமா? - அடடே தகவ...
கோயிலில் திருட முயற்சி: பொதுமக்களிடம் சிக்கிய இருவா்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை கோயிலில் திருடுவதற்காக பூட்டை உடைத்த இருவரை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனா்.
செங்கத்தை அடுத்த பரமனந்தல் திருவள்ளூவா் நகரில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் ஏதோ சப்தம் கேட்டுள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த சிலா் கோயில் அருகில் சென்று பாா்த்தபோது, 3 போ் கோயில் உண்டியலை திருட கோயிலின் முன்கதவு பூட்டை உடைத்துக் கொண்டிருந்தனா். இதைப் பாா்த்த அவா்கள் உடனடியாக அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்து, அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து பூட்டை உடைத்த நபா்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனா். மேலும் ஒரு நபா் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாா்.
பின்னா், பிடிபட்ட இருவரையும் கிராம மக்கள் அடித்து உதைத்து கோயில் வளாகத்தில் கட்டிவைத்து செங்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் வந்து இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், இருவரும் செங்கம் அருகே வளையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முருகன் (35), பூவரசு (32) என்பது தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய வல்லரசு என்பவரும் அதே கிராமத்தைச் சோ்ந்தவா் என்பது தெரிய வந்தது. 3 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.