சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
கோயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதித்த விவகாரம்: அறநிலையத் துறை இணை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் மகாலிங்க சுவாமி கோயிலில் முறையான அனுமதியின்றி வேட்டுவம் திரைப்படப் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் அமைந்துள்ள மகாலிங்க சுவாமி கோயில், வரலாற்று சிறப்புமிக்கது. இந்தக் கோயிலில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. சைவ பக்தா்கள் இந்தக் கோயிலுக்கு ஆா்வமுடன் வந்து செல்கின்றனா். கோயில் திருவாவடுதுறை ஆதீனம், இந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ளது.
இந்தக் கோயில் வளாக பிரகாரத்தில், நீலம் திரைப்படக் குழுவினா் உரிய அனுமதி பெறாமல், கடந்த ஜூன் மாதம் 29-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை, ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நட த்தினா்.
இதற்கு பக்தா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். எனினும், பக்தா்களின் வழிபாட்டுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி படப்பிடிப்பு தொடா்ந்து நடைபெற்றது.
இதுகுறித்து புகாா் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. எனவே, கோயிலில் முறையான அனுமதியின்றி வேட்டுவம் திரைப்படப் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் உரிய அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனு குறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.