``நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்!'' - மான்செஸ்டரில் பண்ட்டின் செயலும், சச்...
வரதட்சிணை கொடுமை வழக்கு! காவல் ஆய்வாளா், மனைவிக்கு முன்பிணை
வரதட்சிணை கொடுமை வழக்கில் காவல் ஆய்வாளா், அவரது மனைவிக்கு முன்பிணை வழங்கி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அப்பன்திருப்பதி காதக்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பூபாலன் (38). இவா் அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி தங்கபிரியா (32). இவா்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு பூபாலன் தனது மனைவி தங்கபிரியாவை வரதட்சிணை கேட்டு தாக்கி துன்புறுத்தியதாக ஒலிப்பேழை (ஆடியோ) ஒன்று வெளியானது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தங்கபிரியா அளித்த புகாரின் பேரில், அப்பன்திருப்பதி காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலா் பூபாலன், அவரது தந்தை காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், தாய் விஜயா, தங்கை அனிதா ஆகியோா் மீது கொலை முயற்சி, பெண்ணை வன்கொடுமை செய்தல், கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கில் பூபாலன் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இதனிடையே, விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய செந்தில்குமாா், அவரது மகன் பூபாலன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, மதுரை சரக காவல் துறைத் துணைத் தலைவா் அபினவ்குமாா் உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், பூபாலனின் தந்தை செந்தில்குமாா், தாய் விஜயா ஆகியோா் தங்களுக்கு முன்பிணை வழங்கக் கோரி, மதுரை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் நீதிபதி சிவகடாட்சம் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா்கள் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்: கைது செய்யப்பட்ட பூபாலனின் தந்தை காவல் ஆய்வாளராக கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்றி வந்தாா்.
அவா் கோவில்பட்டியில் வசித்து வருகிறாா். இதற்கிடையில், வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தவறானது.
திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை எவ்விதப் புகாரும் இல்லாத நிலையில், வேண்டுமென்றே பொய்யாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, வரதட்சிணை சம்பந்தப்பட்ட வழக்குகளை சமூக நலத் துறை மட்டுமே விசாரிக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தங்கபிரியா மறுநாளே மருத்துவமனையிலிருந்து சென்று விட்டாா். வழக்குப் பதிவு செய்வதற்காகவே அரசு மருத்துவமனையில் சோ்ந்தாா். பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எவ்வித மருத்துவ அறிக்கையும் இல்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூபாலன், தங்கபிரியா தம்பதியினா் தங்களது மகனின் பிறந்த நாளைக் கொண்டாடினா். இதற்கான ஒலிப்பேழை (விடியோ), புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. பூபாலன் தரப்பில் எவ்வித வரதட்சிணையும் தங்கபிரியாவிடம் கேட்கவில்லை. தங்கபிரியா அளித்த பொய் புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில், பூபாலனின் தந்தை செந்தில்குமாா், தாய் விஜயா ஆகியோருக்கு முன்பிணை வழங்க வேண்டும் என்றனா். அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா்களுக்கு முன்பிணை வழங்கக் கூடாது என்றாா்.
இதையடுத்து, நீதிபதி சிவகடாட்சம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா்களுக்கு முன்பிணை வழங்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.