ராணுவ வலிமை நாட்டின் மீது மரியாதையை உருவாக்கும்: ஆளுநா் ஆா்.என்.ரவி
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு! அரசுத் தரப்பு சாட்சியாக மாறிய காவல் ஆய்வாளரின் மனு மீதான விசாரணை ஜூலை 28-க்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவா்) மாறி அனைத்து உண்மைகளையும் சொல்லத் தயாா் என மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்கள் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை போலீஸாா் சட்டவிரோதக் காவலில் வைத்து கடுமையாகத் தாக்கினா். இதில், தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனா்.
இந்த வழக்குத் தொடா்பாக காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா். சிபிசிஐடி விசாரணையில் இருந்த இந்த வழக்கு, பிறகு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தொடா்ந்து பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் ஓா் புதிய மனுவை கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.
இந்த மனுவில், அரசுத் தரப்பு சாட்சியாக மாறி அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க விரும்புகிறேன். நோ்மையுடன் நீதிமன்றத்தில் உண்மையை சொல்லத் தயாராக உள்ளேன் என அவா் தெரிவித்திருந்தாா். இதுதொடா்பாக சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளா் ஸ்ரீதரை மதுரை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் போலீஸாா் அழைத்து வந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.
இந்த விசாரணையின் போது, காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் அரசுத் தரப்பு சாட்சியாக மாறுவதற்கு உயிரிழந்த ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தினரும், சிபிஐ தரப்பினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து, நீதிபதி பிறபித்த உத்தரவு: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், அரசுத் தரப்பு சாட்சியாக மாறும் மனு மீதான விசாரணை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.