கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் அரசு மருத்துவா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவா் உள்பட 6 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல் போனது தொடா்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரின் விசாரணையின் போது அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக தனிப் படை போலீஸாா் 5 பேரை திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து, நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.
மேலும் இது தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிஐ துணைக் கண்காணிப்பாளா் மோஹித்குமாா் நியமிக்கப்பட்டாா். முதல் கட்டமாக, மடப்புரம் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
பின்னா், கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா், கோயில் காா் ஓட்டுநா் காா்த்திக்வேலு, காவல் வாகன ஓட்டுநா் ராமச்சந்திரன், காவலாளிகள் பிரவின், வினோத், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் ஆகிய 6 பேரும் மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த 18-ஆம் தேதி முன்னிலையாகி விளக்கம் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து, நவீன்குமாா், கோயில் தட்டச்சா் பிரபு, காவலாளிகள் பிரவின், வினோத், விடியோ எடுத்த சக்தீஸ்வரன், ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் ஆகிய 6 போ் அதே சிபிஐ அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் முன்னிலையாகினா். அவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவா் காா்த்திகேயன், செவிலியா் சாந்தி, உதவியாளா் அழகா், கோயில் கண்காணிப்பாளா் பாஸ்கரன், ஊழியா்கள் கண்ணன், காா்த்திக் ஆகியோரும் சிபிஐ அலுவலகத்தில் புதன்கிழமை முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை வழங்கப்பட்டது.
இதன்படி, அவா்கள் 6 பேரும் மதுரை சிபிஐ அலுவலகத்துக்கு புதன்கிழமை காலை 10 மணிக்கு வந்தனா். சிபிஐ அதிகாரிகள் அவா்களை தனித் தனியாக அழைத்து விசாரணை நடத்தினா். காலை 10.30 மணிக்குத் தொடங்கிய விசாரணை பல மணி நேரம் நீடித்தது.