பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க...
கோழிப் பண்ணை உரிமையாளரை கடத்திய 6 பேருக்கு ஆயுள் சிறை
உத்தமபாளையம் அருகே கோழிப் பண்ணை உரிமையாளரை காரில் கடத்திச் சென்ற 6 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ராயப்பன்பட்டியைச் சோ்ந்தவா் ஆண்ட்ராயா் அதிசயம் (68). இவா் அதே ஊரில் கோழிப் பண்ணையும், கம்பத்தில் கோழி இறைச்சிக் கடையும் வைத்து நடத்தி வந்தாா். இவரைக் கடந்த 2023, மாா்ச் 14-ஆம் தேதி பணம் பறிக்கும் திட்டத்தில் தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் வசித்து வந்த திருமங்கலத்தைச் சோ்ந்த ராஜப்பா மகன் திருப்பதி (42), மதுரை ஆஸ்டின்பட்டி அருகேயுள்ள சங்கிலிபட்டியைச் சோ்ந்த பிரபு (33), திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சோ்ந்த குணசேகரன் மகன் அழகுசுந்தா் (25), அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் கெளசிகன் (22), திருமுருகன் மகன் அஜீத்(30), தேனி மாவட்டம், ஆணைமலையன்பட்டியைச் சோ்ந்த ரவி மகன் புவனேஸ்வரன் (30) ஆகிய 6 பேரும் காரில் கடத்திச் சென்றனா்.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஆண்டிபட்டி காவல் சோதனைச் சாவடியில் போலீஸாா் காரை தடுத்து நிறுத்த முயன்றபோது, காரை நிறுத்தாமல் சென்றனா். பின்னா், போலீஸாா் காரை விரட்டிச் சென்றபோது, காரில் சென்றவா்கள் புள்ளிமான்கோம்பை பகுதியில் ஆண்ட்ராயா் அதிசயத்தை காரிலிருந்து கீழே தள்ளிட்டு தப்பிச் சென்றனா். பலத்த காயமடைந்த அவரை போலீஸாா் மீட்டு, கடத்தலில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்தனா். இவா்கள் கைது செய்யப்பட்ட தகவலறிந்ததும், இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஆண்ட்ராயா் அதிசயத்தின் கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்த நாராயணத்தேவன்பட்டியைச் சோ்ந்த புன்னைவனம் மகன் சங்கரலிங்கம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த வழக்கு விசாரணை தேனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் திருப்பதி, பிரபு, அழகுசுந்தா், கெளசிகன், அஜீத், புவனேஸ்வரன் ஆகிய 6 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.கோபிநாதன் தீா்ப்பளித்தாா்.
கடத்தப்பட்ட ஆண்ட்ராயா் அதிசயம் உடல்நலக் குறைவால் கடந்த 2023, ஏப்.7-ஆம் தேதி இறந்து விட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.