கோவில்பட்டியில் நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்; சாலை மறியல்
கோவில்பட்டியில் திங்கள்கிழமை, ஆக்கிரமிப்பு அகற்றம் தொடா்பாக நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததுடன், சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோவில்பட்டியில் உள்ள தினசரி காய்கறி சந்தை சாலை என்பது, அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சாத்தூா், மதுரை, தூத்துக்குடி, எட்டயபுரம், திருச்செந்தூா் செல்லும் பேருந்துகள், வாகனங்களுக்கான ஒருவழிப் பாதையாக இருந்தது. இந்தச் சாலைக்கு இளையரசனேந்தல் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இளையரசனேந்தல் சாலையில் தண்டவாள சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதால், 2015-ஆம் ஆண்டுமுதல் காய்கறி சந்தை சாலைக்கு இளையரசனேந்தல் சாலை வழியாக பேருந்துகள் செல்ல முடியவில்லை. இதனால், அந்த சாலை பைக், சுமை வாகனங்களை நிறுத்துமிடமாக உள்ளது.
இதனிடையே, பசும்பொன் உ.முத்துராமலிங்கம் தேவா் தினசரி சந்தையில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு கட்டப்பட்ட புதிய கடைகள் கடந்த பிப்ரவரியில் திறக்கப்பட்டன. கடைகள் ஏலம் விடப்பட்ட பிறகும், சில கடைகளில் மட்டும் காய்கறி வியாபாரம் நடைபெறுகிறது. பெரும்பாலானவை மூடிக்கிடக்கின்றன.
இந்நிலையில், நகராட்சி நகரமைப்பு அலுவலா் சேதுராஜன் தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் திங்கள்கிழமை தினசரி சந்தை சாலைக்கு வந்தனா். நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், பழக்கூடைகள், கரும்பு, தள்ளுவண்டி உள்ளிட்டவற்றை சுமை வாகனத்தில் ஏற்றினா். அவா்களிடம், அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிவிட்டு இங்கு வருமாறு கூறி வியாபாரிகள் வாக்குவாதம் செய்தனா்.
அப்போது அங்கு வந்த தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாவட்டப் பொருளாளா் எஸ்.ஆா். பாஸ்கரன், நிா்வாகி செல்வம் என்ற செல்லத்துரை ஆகியோா் தலைமையில் வியாபாரிகள் சுமை வாகனத்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். எடுத்துச்செல்லப்பட்ட பொருள்கள் திருப்பி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதால், வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றனா். அங்கு, கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பொருள்களை எடுத்துச் செல்லலாம் என, நகரமைப்பு அலுவலா் கூறினாராம். அதற்கு வியாபாரிகள் மறுப்பு தெரிவித்துவிட்டு வெளியேறியதுடன், நகராட்சி அலுவலா்கள் மீது போலீஸில் புகாரளிக்க உள்ளதாகக் கூறினா். இச்சம்பவத்தால், சந்தை சாலை ஒரு மணி நேரத்துக்கும் மேல் பரபரப்புடன் காணப்பட்டது.