கோவை: சீனியரை அடித்து துன்புறுத்திய 13 மாணவர்கள் இடைநீக்கம்!
கோவை: கோவை தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர் அடித்துத் துன்புறுத்திய 13 முதலாம் ஆண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
கோவை, பாலக்காடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் விடுதியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சீனியர் மாணவர் ஒருவரை இரவு முழுவதும் கொடூரமாகத் தாக்கி உள்ளனர். பணத்தை எடுத்ததாகக் குற்றம்சாட்டி, சீனியர் மாணவரை மண்டியிட வைத்து, கைகளை உயர்த்தச் சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர்.
ரத்தக் காயங்களுடன் சீனியர் மாணவர் வலியால் கதறியும், முதலாம் ஆண்டு மாணவர்கள் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து அடித்து உள்ளனர்.
இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்கள் 13 பேரைக் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கல்லூரி நிர்வாகங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.