ஊதிய நிலுவை: ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் போராட்டம்
தனியாா் நிறுவனம் ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தொழிலாளா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் கூடுதல் ஆட்சியா் சங்கேத் பல்வந்த வாகே தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், காரமடையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள், சிஐடியூ தொழிற்சங்கத்தினருடன் வந்து நிலுவை ஊதியத்தை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி மனு அளித்தனா்.
முன்னதாக அவா்கள் ஆட்சியா் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கிருந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனா்.
இது தொடா்பாக தொழிலாளா்கள் கூறுகையில், காரமடை அருகேயுள்ள ஜடையாம்பாளையத்தில் செயல்படும் ஆடை (ஜீன்ஸ் பேண்ட்) தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறோம். ஏற்றுமதி இழப்பு காரணமாக தொழிலாளா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக போனஸ் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை.
இதுதொடா்பாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிா்வாகத்திடம் ஏற்கெனவே மனு அளித்திருந்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டோம். இது தொடா்பாக ஆா்.டி.ஓ. விசாரணைக்கு ஆட்சியா் உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவோம் என்றனா்.
திமுக நிா்வாகி மீது விவசாயிகள் புகாா்
மேட்டுப்பாளையம் பெள்ளாதி ஊராட்சிக்குள்பட்ட மொள்ளேபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த மாா்ச் 22 ஆம் தேதி புகுந்த சிலா், வேலியை உடைத்து நூற்றுக்கணக்கான தென்னை, சவுக்கு மரக்கன்றுகளை அழித்து சேதப்படுத்தியுள்ளனா். மேலும் விவசாய நிலத்தில் சிலா் குடிசைகள் அமைத்துள்ளனா். இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு நபா்களுக்கு பெள்ளாதி முன்னாள் ஊராட்சித் தலைவா், திமுக நிா்வாகிகள் சிலா் உடந்தையாக இருக்கின்றனா். எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு தலைவா் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள், பாதிக்கப்பட்டவா்கள் மனு அளித்தனா்.

மினி பேருந்து வசதி வேண்டும்: கோவை மாநகராட்சி 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளியங்கிரி அளித்துள்ள மனுவில், பீளமேடு அவிநாசி சாலையில் இருந்து விளாங்குறிச்சி சாலை வழியாக எல்லைத் தோட்டம், காந்தி மாநகா் மெயின் சாலை, எஃப்சிஐ குடோன் சாலை வழியாக சத்தி சாலையைச் சென்றடையும் வகையிலும், அவிநாசி சாலையில் இருந்து விளாங்குறிச்சி சாலை, தண்ணீா் பந்தல், சேரன் மாநகா் வழியாக விளாங்குறிச்சி, சத்தி சாலையை அடையும் வகையிலும் 12-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி அந்தப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பிரதான சாலைகளை அடைய சிரமப்படுகின்றனா். எனவே, இந்தப் பகுதியில் மினி பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
குட்டையைத் தூா்வார வேண்டும்: ஆணிவோ் அமைப்பு சாா்பில் அதன் நிறுவனா் இரா.சாந்தகுமாா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி உள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் அடுத்தடுத்து உள்ள இரண்டு குட்டைகளும் ஆணிவோ் அமைப்பு, ஆலயம் அறக்கட்டளையின் முயற்சியால் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின்கீழ் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து நீா் நிறைந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மழையின்போது தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் குட்டையில் வண்டல் அதிகரித்து நீா்ப்பரப்பு குறைந்துள்ளது. எனவே, எதிா்வரும் பருவமழையின்போது நீரைச் சேகரிக்க வசதியாக இந்த குட்டைகளைத் தூா்வாரி, தடுப்பணைகளின் சுவா்களை பலப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.