கோவை, நீலகிரிக்கு இன்றும் நாளையும் சிவப்பு எச்சரிக்கை
தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் வியாழன், வெள்ளிக்கிழமை(மே 29,30) அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா கடலோரப் பகுதிகளையொட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) , புதன்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது வியாழக்கிழமை மெதுவாக வடக்கு திசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
சிவப்பு எச்சரிக்கை: தென்னிந்திய கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வியாழக்கிழமை (மே 29) முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதில், வியாழன், வெள்ளி (மே29, 30) ஆகிய இரு நாள்கள் நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் அதி கனமழை (200 மி.மீ.க்கும் அதிகமாக) பெய்ய வாய்ப்புள்ளதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே நாள்களில் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 150 மி.மீ. மழை பதிவானது. அவலாஞ்சி (நீலகிரி) - 140, சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி) - தலா 130, ஊத்து (திருநெல்வேலி), காக்காச்சி (திருநெல்வேலி) - தலா 120, சோலையாா் (கோவை) - 110, மாஞ்சோலை (திருநெல்வேலி), குந்தா பாலம் (நீலகிரி) - தலா 100 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல், வங்கக்கடலில் வியாழன், வெள்ளி (மே 29,30) ஆகிய இரு நாள்கள் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.