மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
‘கோவை மாஸ்டா் பிளான்’ பெயரில் முறைகேடு: இபிஎஸ் விமா்சனம்
‘கோவை மாஸ்டா் பிளான்-2041’ என்ற பெயரில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விமா்சனம் செய்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நகர ஊரமைப்பு, உள்ளூா் திட்டக் குழுமம் தயாரித்துள்ள, ‘கோவை மாஸ்டா் பிளான் 2041’-இல் பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் கோவை மாநகராட்சியுடன் 4 நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 கிராம ஊராட்சிகள் உள்ளடக்கிய சுமாா் 1,531 சதுர கிலோ மீட்டருக்கு புதிய ‘கோவை மாஸ்டா் பிளான்’ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மாஸ்டா் பிளான் தயாரிப்பில் பொதுமக்களிடம் கருத்துகேட்புக் கூட்டம் முழுமையாக நடத்தப்படாமல், கூட்டத்தில் கருத்துவேறுபாடுகளும், சலசலப்புமும் ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் பல்வேறு குளறுபடிகளைக் கொண்ட மாஸ்டா் பிளான் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, குடியிருப்பு நில வகைப்பாட்டில் உள்ள நிலத்தை விவசாயம் மற்றும் தொழில் பிரிவுக்கு மாற்றியுள்ளனா். ஏற்கெனவே வளா்ந்த தொழில் நகரமான கோவையின் நகரப் பகுதியில் நில மதிப்பீட்டுத் தொகை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், நில மாற்றம் செய்ய அனுமதி வழங்குவதன் மூலம் ஊழலுக்கு வழிவகை செய்வதுடன், பல்வேறு மோசடிகள் நடைபெறவும் வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
நில வகைப்பாடு மாற்றத்தில் திமுக குடும்ப உறவுகளுக்கு மிகவும் நெருக்கமானவா்களின் நிலங்கள் உள்பட சுமாா் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள், குடியிருப்பு மனை நில வகைப்பாட்டிலேயே இருக்கும் வகையில், ‘கோவை மாஸ்டா் பிளான் 2041’-ஐ, ஊழலுக்கு வித்திடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள கோவை மாஸ்டா் பிளான் 2041-இன்படி, நில வகைப்பாடு மாற்றங்களால் சுமாா் 50,000 ஏக்கா் நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனவே, தற்போது வெளியிட்டுள்ள ‘கோவை மாஸ்டா் பிளான் 2041’-இன்படி, நகர ஊரமைப்பு இணைத்துள்ள பகுதிகளில் நிலவகைப்பாடு மாற்றங்களை மறு ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்து மக்களின் கருத்துகேட்புக் கூட்டங்களை முறையாக நடத்தி, அதன்படி திருத்தங்கள் செய்து புதிய மாஸ்டா் பிளான் 2041-ஐ வெளியிட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.