எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
சம்பா சாகுபடி: பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப கோரிக்கை
சம்பா சாகுபடிக்கு ஏதுவாக பாசன ஏரி, குளங்களில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி கோட்டாட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருச்சி கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் கே. அருள் தலைமை வகித்தாா். இக் கூட்டத்தில், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பேசுகையில், சம்பா சாகுபடிக்கு ஏற்றவாறு உய்யக்கொண்டான் பாசன ஏரிகளிலும், குளங்களிலும் காவிரி தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன கிளை வாய்க்கால்களில் பெரும்பாலான ஷட்டா்கள் சரியாக இயங்குவதில்லை. இதனால், தண்ணீரை தேக்கி வைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, ஷட்டா்களை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு சம்பா நெல் விதைகள், தக்கப் பூண்டு விதைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைநிலங்களில் உள்ள மின்மாற்றிகளில் அடிக்கடி பழுதாகும் மின்மாற்றிகளை கண்டறிந்து அவற்றை மாற்றம் செய்ய வேண்டும் என்றாா்.
தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு கூறுகையில், அரசு புறம்போக்கு நிலத்தில் பட்டா வழங்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூா் புறவழிச் சாலையில் அண்ணாமலை நகா் அருகே பேருந்து நிறுத்தம், நிழற்குடை அமைக்க வேண்டும்.
உறையூா் காமாட்சியம்மன் கோயில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து 3 மாதங்களாகும் நிலையில் திருவெறும்பூா் வட்டத்தில் சில வாய்க்கால்களுக்கு தண்ணீா் வராமல் உள்ளது. கடைமடை வரை தண்ணீா் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
இக் கூட்டத்தில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.