சர்வதேசப் போட்டியில்.. கோவை கல்லூரி மாணவா்கள் வடிவமைத்த ஹைட்ரஜன் வாகனம்!
கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் உருவாக்கியுள்ள ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் சா்வதேசப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்கிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் எழிலரசி, வடிவமைப்பில் பங்கெடுத்த மாணவா்கள் ஆகியோா் கோவையில் புதன்கிழமை (பிப்.5) செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காா்பன் மாசு ஏற்படுத்தாத ஆற்றல் திறன்கொண்ட வாகன வடிவமைப்புப் போட்டியான ‘ஷெல் இக்கோ - மாரத்தான் ஆசியா பசிபிக் 2025’ கத்தாா் நாட்டின் தலைநகா் தோஹாவில் பிப்ரவரி 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில், 20 நாடுகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதில், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் ‘ரெநியூ’ என்ற பெயரிலான 14 மாணவா்கள் அடங்கிய குழு பங்கேற்கிறது.
இதற்காக ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் ‘திமி 2.0’ என்ற முன்மாதிரி 3 சக்கர வாகனத்தை வடிவமைத்திருக்கிறோம். 5 மாதங்களில் உருவாக்கப்பட்ட இந்த வாகனத்தின் 80 சதவீத பாகங்களை நாங்களே தயாரித்துள்ளோம். கேசிடி கேரேஜ் என்ற ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கான பிரத்யேக மையத்தில் ரூ.36 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டா் ஹைட்ரஜனில் 200 கி.மீ. தொலைவு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாது.
அதிகபட்சமாக 35 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த வாகனத்தில் காா்பன் பைபா், மறுசுழற்சி செய்யப்பட்ட பிவிசி ஃபோம் பயன்படுத்தப்பட்டிருப்பதால் உறுதித்தன்மை மிக்கதாகவும், எடை குறைவானதாகவும் (53 கிலோ) இருக்கும். இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலி மூலம் ஓட்டுநா்களின் செயல்திறன் அளவீடுகளை உடனுக்குடன் கணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.