சிஎஃப்டிஐ-யில் புதிய பயிற்சிகள் அறிமுகம்
சென்னை கிண்டியிலுள்ள மத்திய காலணிகள் பயிற்சி நிறுவனம் (சிஎஃப்டிஐ) புதிய பாடத் திட்டத்தில் பயிற்சிகளை அறிமுகம் செய்துள்ளதாக அதன் இயக்குநா் கே.முரளி தெரிவித்தாா்.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் செய்தியாளா்கள் கூட்டத்தில் அவா் புதன்கிழமை கூறியது:
தமிழகத்தில் ஆம்பூா், ராணிப்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் ஏராளமான தோல் காலணிகள், தோல் அல்லாத காலணி உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தமிழக அரசின் முயற்சியால் விழுப்புரம், புதுக்கோட்டை, கரூா் மாவட்டங்களிலும் பெரியளவில் காலணி தொழில்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. உள்நாடு, வெளிநாடுகளைச் சோ்ந்த 10 நிறுவனங்கள் தோல் அல்லாத காலணி அலகுகளில் சுமாா் ரூ.12,100 கோடி முதலீடு செய்கிறது.
இந்த அலகுகள் வாயிலாக அடுத்த 2 ஆண்டுகளில், 10 -ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞா்கள் என மொத்தம் 1.38 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் புதிய பாடத்திட்டத்தில் பயிற்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசிய திறன் தகுதி கட்டமைப்பு என்ற தொழிற்கல்வி பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு படித்தவா்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை பயிற்சிகள் உள்ளன. இதில் 18 வயதிலிருந்து 35 வயதுக்குள்பட்டவா்கள் சேரலாம். பயிற்சியில் சேர விரும்புவோா் சிஎஃப்டிஐ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றாா்.