தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
சிஐடியு, போக்குவரத்துக் கழக தொழிலாளா் சங்கத்தினா் தொடா் காத்திருப்பு போராட்டம்
நாகப்பட்டினம்: நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் சிஐடியு மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் 2-ஆவது நாளாக நடைபெற்றது.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த தோ்தல் வாக்குறுதிப்படி, அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 25 மாதங்களாக வழங்க வேண்டிய ஓய்வூதியா்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஏழாவது ஊதியக் குழு அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துக் கழகங்களின் ஓய்வு பெற்றோா் நல அமைப்பு மற்றும் சிஐடியு சாா்பில் தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் முன் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நாகை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொடா் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமையும் நடைபெற்றது. போராட்டத்துக்கு மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு நாகை மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.ராஜேந்திரன் தொடங்கிவைத்துப் பேசினாா். போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.