சிகிச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
கவனக் குறைவான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு திருச்சி தனியாா் மருத்துவமனை ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை புத்தாநத்தத்தைச் சோ்ந்த 26 வயதுப் பெண் ஒருவா் முதல் பிரசவத்துக்காக திருச்சி தில்லை நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையை அணுகினாா். கடந்த 26-09-2021 அன்று மருத்துவமனையில் பெண் மருத்துவா் ஒருவரும், மயக்கவியல் மருத்துவரும் இணைந்து மயக்க மருந்து கொடுத்து, அறுவைச் சிகிச்சை செய்து, பெண் குழந்தை பிறந்தது.
பிரசவத்தைத் தொடா்ந்து அப்பெண்ணுக்கு வலது காலில் உணா்விழப்பு, சோா்வடைதல், கட்டுபாடின்றி சிறுநீா் வெளியேறுதல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதற்கு முதுகெலும்பில் சரிவர மயக்க மருந்து கொடுக்காததே காரணம் எனக் கூறப்படுகிறது.
இப்பிரச்னைகளுக்கு மருத்துவம் பாா்த்தும் உரிய தீா்வு கிட்டாததால், இதுவரை அவரால் தரையில் குனிந்து உட்கார முடியாமல், சரிவர நடக்க முடியாமல், அவதிக்குள்ளாகிறாா்.
இதையடுத்து அந்தப் பெண், மருத்துவ அலட்சியத்தால் தனக்கு ஏற்பட்ட இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும், வருங்கால மருத்துவச் செலவுக்கும் நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்திடம் கடந்த 18-08-2022 அன்று மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு சிகிச்சையில் கவனக் குறைவு, மனஉளைச்சல், வலிக்காக தனியாா் மருத்துவமனையானது மனுதாரருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடும், மருத்துவமனையின் மயக்க மருந்து நிபுணா் தனது பங்காக ரூ. 20 லட்சமும், வழக்குச் செலவுக்காக ரூ. 15 ஆயிரத்தையும் அடுத்த 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.