காட்டாற்று வெள்ளம்: மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிப்பு
சிரியாவின் இடைக்கால அரசுக்கு எச்சரிக்கை! அதிபர் மாளிகை அருகில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!
சிரியாவின் அதிபர் மாளிகையின் அருகிலுள்ள பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் அருகில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் அந்நாட்டின் இடைக்கால அரசின் ஆதரவாளர்களுக்கும், ட்ரூஸ் எனும் சிறுபான்மையினத்தின் ஆயுதம் ஏந்திய போராளிகளுக்கும் இடையிலான மோதலில் ஏராளமானோர் பலியாகினர்.
இந்தத் தாக்குதல்களை இனப்படுகொலை எனக் குறிப்பிட்ட ட்ருஸ் மக்களின் மதகுரு ஒருவர், கடந்த ஏப்.30 ஆம் தேதியன்று அதற்கு காரணமான சிரியாவின் இடைக்கால அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அந்நாட்டின் தெற்கு பகுதிகளில் ட்ரூஸ் இனமக்கள் வசித்து வரும் கிராமங்களை நோக்கி இடைக்கால அரசின் அதிகாரிகள் படையெடுப்பு நடத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படையெடுப்பை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேல் அரசு எச்சரித்து வந்தது.
இந்நிலையில், சிரியாவின் அதிபர் மாளிகையின் அருகில் இஸ்ரேல் ராணுவத்தின் விமானப் படை இன்று (மே.2) வான்வழித் தாக்குதல்கள் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலானது, சிரியாவின் இடைக்கால அரசின் தலைவர்களுக்கான எச்சரிக்கை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த ஏப்.27 அன்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் முகமது நபி குறித்து அவதூறாகப் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோ ட்ரூஸ் மதகுரு ஒருவரினால் பேசப்பட்டவை எனக் கருதப்படுவதினால் ட்ரூஸ் போராளிகளுக்கும் இடைக்கால அரசின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
மேலும், ட்ருஸ் மக்களில் பெரும்பாலானோர் லெபனான் மற்றும் 1967-ம் ஆண்டு போரில் சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றி ஆக்கிரமித்த கோலன் ஹைட்ஸ் ஆகிய பகுதிகளில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தாயகம் செல்ல முடியாமல் எல்லையில் முகாமிட்டுள்ள பாகிஸ்தானியர்கள்! தொடரும் தவிப்புகள்!