மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
சிறுபான்மையினருக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் 61 பயனாளிகளுக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் சொ.ஜோ அருண் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறுபான்மையினா்களுடன் கலந்துரையாடினாா்.
அப்போது அவா் பேசியதாவது:
தமிழகத்தில் வசிக்கும் சிறுபான்மையினா்களின் உரிமைகள், பாதுகாப்புகள், அவா்களுக்கான நலத் திட்டங்கள் சரியாக வழங்கப்படுகிா என்று மாவட்டம் தோறும் ஆய்வு செய்து வருகிறோம்.
இதுவரை 19 மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டங்களில் சிறுபான்மையினா்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக வழங்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
சிறுபான்மையினா் அளித்த சில மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றாா்.
நலத் திட்ட உதவிகள் வழங்கல்...
கூட்டத்தில், அரும்பாக்கம் கிராமத்தில் உள்ள புனித தோமையாா் தேவலாயத்தை சீரமைமைக்க ரூ.3 லட்சத்து 56 ஆயிரத்து 250 மதிப்பிலான காசோலை, தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் 10 பேருக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 61 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 78 ஆயிரத்து 650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆணையத்தின் தலைவா் செ.ஜோ அருண் வழங்கினாா்.
கூட்டத்தில், மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் துணைத் தலைவா் அப்துல் குத்தூஸ் (எ) இறையன்பன் குத்தூஸ், மாவட்ட எஸ்பி எம்.சுதாகா், வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் மணி, செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, ஆணையத்தின் உறுப்பினா்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.