மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
சுதந்திர நாளில் 1,090 பேருக்கு வீரதீர விருதுகள்! முதலிடத்தில் ஜம்மு - காஷ்மீர்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு 1000க்கும் மேற்பட்டோருக்கு வீரதீர செயலுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் இடம்பிடித்துள்ளனர்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறை, தீயணைப்பு சேவைகள், ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணிகளுக்கான விருது பெறுபவர்களின் அதிகாரபூர்வ பட்டியலை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த விருதுகளில் வீரதீர விருதுகள், சிறப்புமிக்க சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கம் ஆகியவை அடங்கும்.
இந்த ஆண்டு, மொத்தம் 1,090 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படவிருக்கின்றன. இதில், 152 பேர் ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் வடகிழக்கைச் சேர்ந்தவர்கள்.
233 பேருக்கு வீரதீர விருதும், 99 பேருக்கு சிறப்பு சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கங்கள், 758 பேருக்கு சிறப்பாக சேவையாற்றியதற்கான பதக்கங்களும் வழங்கப்படவுள்ளது.
காவல்துறை பிரிவில் 226 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 89 பேருக்கு சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் பதக்கங்களும், 635 பேருக்கு சிறப்பான சேவைக்கான பதக்கமும் வழங்கப்படவுள்ளது.
இந்தப் பட்டியலில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பிடித்துள்ளனர். அதைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்ளனர்.
தீயணைப்பு வீரர்களுக்கு 62 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 வீரதீரப் பதக்கங்கள், 5 குடியரசுத் தலைவரின் சிறப்பான சேவைக்கான பதக்கங்கள் மற்றும் 51 சிறப்பான சேவைக்கான பதக்கங்கள் அடங்கும்.
ஊர்க்காவல் படை மற்றும் குடிமைப் பாதுகாப்புப் பிரிவில், ஒரு வீரதீரப் பதக்கம், சிறப்புமிக்க சேவைக்கான மூன்று குடியரசுத் தலைவரின் பதக்கங்கள் மற்றும் சிறப்பான சேவைக்கான 41 பதக்கங்கள் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.