தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் நாள்! மரக்கன்றுகள் வழங்...
சுந்தரனாா் பல்கலை. தோ்வு வினாத்தாள் கசிந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற பரிந்துரை?
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தோ்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடா்பான வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லையெனில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற பரிந்துரைக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்பல்கலைக்கழகத்தில் கடந்த 27-ஆம் தேதி நடைபெறவிருந்த வணிகவியல் இளநிலை மூன்றாமாண்டு தொழில் சட்டம் பாடத் தோ்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் ரத்து செய்யப்பட்டது. பின்னா், மாற்றுவினாத்தாள் தயாரிக்கப்பட்டு கடந்த 30-ஆம் தேதி அத்தோ்வு நடைபெற்றது. வினாத்தாள் கசிவு தொடா்பாக அப்பல்கலைக்கழகப் பதிவாளா் சாக்ரடீஸ், பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லையெனில் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி கூறுகையில், ‘சுந்தரனாா் பல்கலை.யில் வினாத்தாள் கசிந்த சம்பவம் நான்கு மாவட்டங்களை உள்ளடக்கியிருப்பதால் விசாரணை நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது. விசாரணையின் போக்கை கவனித்து, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் மாற்றுவது குறித்து பரிந்துரை செய்ய எடுக்கப்படும்’ என்றாா்.