செங்கோட்டையன் வீட்டில் குவிந்த அதிமுக நிர்வாகிகள் -அவரச ஆலோசனையா? -பரபரப்பில் அதிமுக
அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சரும், கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.-வுமான செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், "அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பான பாராட்டு விழா அழைப்பிதழ்கள் மற்றும் மேடையில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம்பெறாத நிலையில், தனது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் விழாவில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.
இருப்பினும். இந்தக் காரணத்துக்காக மட்டும் செங்கோட்டையன் விழாவைப் புறக்கணிக்கவில்லை. கடந்த சில நாள்களாக செங்கோட்டையன் புறக்கணிக்கப்படுகிறார். அதன் விளைவாகவே செங்கோட்டையன் பேசியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். செங்கோட்டையனின் பேச்சு அதிமுக மட்டுமின்றி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு முதல் ஒரு ஆய்வாளர் மற்றும் 3 போலீஸார் அடங்கிய துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-12/6digv4qc/1350476.jpg)
அவசர ஆலோசனையா? குவியும் தொண்டர்கள்... இந்நிலையில், குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் காலை முதலே வரத் தொடங்கி உள்ளனர். கோவையில் உள்ள மகன் வீட்டில் இருக்கும் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்துக்கு வந்து தனது ஆதரவாளர்களைச் சந்திக்கவுள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். "அதிருப்தி என்றாலும் அண்ணன் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார். இந்த முறை தனது மனக்குமுறலை வெளிப்படுத்திவிட்டார். கட்சியின் மிக மூத்த தலைவர் என்பதால், அவரை அழைத்து கட்சி மேலிடம் சமாதானப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம் என்பதைக் காட்டவே கூடியுள்ளோம். ஆலோசனை குறித்து அண்ணன்தான் முடிவு செய்வார்" என்றனர். செங்கோட்டையன் வீட்டில் அதிமுக நிர்வாகிகள் கூடியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.