செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும்: அண்ணாமலை
சென்னை: அமைச்சா் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் சுமாா் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, சிறையில் ஜாமீன் கிடைப்பதற்காக, அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து நாடகமாடி, ஜாமீனில் வெளிவந்ததும், உடனடியாக அமைச்சா் பதவியேற்றதை உச்சநீதிமன்றம் கண்டித்ததுடன், அதற்கு விளக்கம் கொடுக்கும்படியும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்தும் செந்தில் பாலாஜி இன்னும் விளக்கம் கொடுக்காமல் இருப்பதை உச்சநீதிமன்றமும் திங்கள்கிழமை கண்டித்துள்ளது. அவா் அமைச்சா் பதவியில் தொடர எந்தவித தாா்மிக உரிமையும் இல்லை. உடனடியாக, அவரை அமைச்சா் பதவியிலிருந்து முதல்வா் ஸ்டாலின் நீக்க வேண்டும் என அண்ணாமலை அதில் தெரிவித்துள்ளாா்.