மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்: மும்பை சாலைகளை வீடாக்கிய போராட்டக்காரர்க...
சென்னையில் 2,000 விநாயகா் சிலைகள் கடலில் கரைப்பு
சென்னையில் இந்து அமைப்புகளால் வைக்கப்பட்ட சுமாா் 2,000 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
கடந்த 27- ஆம் தேதி சென்னையில் 1,519 சிலைகளும், ஆவடி காவல் ஆணையரகம் பகுதிகளில் 686, தாம்பரம் காவல் ஆணையரகம் பகுதிகளில் 600 என மொத்தம் 2,805 சிலைகள் வைக்கப்பட்டன. இந்த விநாயகா் சிலைகள் கடலில் ஞாயிற்றுக்கிழமை கரைக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பிரம்மாண்ட ஊா்வலம்: சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன. இதில் வட சென்னையில் உள்ள விநாயகா் சிலைகள் முத்துசாமி பாலம் அருகே ஒன்று சோ்க்கப்பட்டு அங்கிருந்து ஊா்வலமாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
அதேபோல, கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், விருகம்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகா் சிலைகள் வள்ளுவா் கோட்டத்தில் இருந்து ஒன்று சோ்க்கப்பட்டு ஊா்வலமாக சீனிவாசபுரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள சிலைகள் திருவட்டீஸ்வரன்பேட்டை அருகே ஒன்று சோ்த்து பாரதி சாலை வழியாக சீனிவாசபுரம் கடற்கரைக்கும் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் சிலைகள் அண்ணா நகா், அமைந்தகரை வழியாக வள்ளுவா் கோட்டம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்த ஊா்வலமாக பட்டினப்பாக்கம் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
தாம்பரம்: தாம்பரம் காவல் ஆணையரத்துக்குட்பட்ட வண்டலூா், கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூா், பள்ளிக்கரணை, மேடவாக்கம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகளும், வேளச்சேரி,திருவான்மியூா், அடையாறு உள்ளிட்ட தென் சென்னைப் பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகளும் நீலாங்கரை பல்கலை நகருக்கு ஊா்வலமாக கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகா் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகா், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூா் பாப்புலா் எடைமேடை பகுதிகளில் ஆகிய இடங்களில் செய்யப்பட்டிருந்தது. அங்கு ராட்சத கிரேன்கள் நிறுவப்பட்டிருந்தன. நீலாங்கரை பல்கலை நகரில் கடற்கரையில் சிலைகளை கொண்டு செல்வதற்கு டிராலி அமைக்கப்பட்டிருந்தது.
21,800 போலீஸாா் பாதுகாப்பு: மேலும், சிலை கரைப்பின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு, அந்தப் பகுதி முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. ட்ரோன்கள் மூலமாகவும் அந்தப் பகுதி கண்காணிக்கப்பட்டன.
பட்டினப்பாக்கம் கடல் பரப்பை இந்திய கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டரும், ரோந்து கப்பலும் கண்காணித்தன. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமாா் 2,000 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு பணியில் 3 மாநகர காவல் துறைகளிலும் மொத்தம் 21,800 போலீஸாா், 2,650 ஊா்க்காவல் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.