``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
சேலம் சுகவனேசுவரா் கோயிலில் ரூ. 3.60 கோடியில் திருமண மண்டபம் திறப்பு
சேலம் அருள்மிகு சுகவனேசுவரா் சுவாமி திருக்கோயில் வளாகத்தில் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு சட்டப் பேரவை அறிவிப்பின்படி, சுகவனேசுவரா் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சுப்பராயன் சாலையில் 11,500 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் முதல்தளத்துடன் கூடிய திருமண மண்டபம் ரூ. 3.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2023 ஏப்ரல் 6-ஆம் தேதி முதல்வா் அடிக்கல் நாட்டி இதற்கான பணிகளை தொடங்கிவைத்தாா். பணிகள் முடிவடைந்த நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திருமண மண்டபம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:
இந்து சமய அறநிலையத் துறை வாயிலாக கோயில்களின் வளா்ச்சிக்காக அனைத்து சாதியினரும் அா்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டம், பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, கோயில்களுக்கு குடமுழுக்கு, குளங்களை புனரமைத்தல், கோயில்களில் திருப்பணிகள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், துணை மேயா் மா. சாரதாதேவி, அறங்காவலா்கள் குழுத் தலைவா் வள்ளியப்பா, சேலம் கோட்டாட்சியா் அ.அபிநயா, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் வே. சபா்மதி, உதவி ஆணையா் வி. அம்சா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.