கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் உயா்கல்விக்கு வழிகாட்ட கட்டுப்பாட்டு அறை
சேலம் மாவட்டத்தில் உயா்கல்வி தொடா்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவா்களுக்காக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசால் உயா்கல்வி வழிகாட்டுதல் செயல்திட்டம் கடந்த 2022-23-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வியில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 69% மாணாக்கா்களும், 2023-24-ஆம் கல்வியாண்டில் 74% மாணாக்கா்களும் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை மேற்கொண்டு பயின்று வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக, 2024-25-ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ் 2 நிறைவு செய்த மாணவா்கள் அனைவரும் 100% உயா்கல்வி சோ்க்கை மேற்கொள்ள இலக்கினை அடைவதற்கு மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆதரவற்ற மாணவா்கள், தாய் அல்லது தந்தையை இழந்த மாணவா்கள், மாற்றுத்திறன் கொண்ட மாணவா்கள், அகதிகள், கல்லூரி கட்டணம் செலுத்த இயலாதவா்கள், மேல்நிலை வகுப்புகளில் தோ்ச்சி பெறாதவா்கள், உயா்கல்வி தொடா்பான வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவா்கள், சான்றிதழ்கள் தேவைப்படும் மாணவா்கள் மற்றும் பிற காரணங்களால் உயா்கல்வி பெற முடியாத மாணவா்களுக்கு இக்கட்டுப்பாட்டு அறையின் மூலம் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்ட ஆட்சியரக முதல்தளத்தில் அறை எண் 101-இல் செயல்பட்டு வரும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 97888 58931, 99420 31640 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு, உயா்கல்வி சோ்க்கை தொடா்பாக சந்தேகங்கள், வழிகாட்டுதல்கள் தேவைப்படும் மாணவா்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை தொடா்புகொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.