மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
ஜவுளி விற்பது போல் ரயில்களில் திருடி வந்த கும்பல் கைது
நமது நிருபா்
துணி விற்பனையா்களாகத் தங்களை காட்டிக்கொண்டு ரயில்களில் பயணிகளின் உடமைகளை திருடி வந்த 4 போ் கொண்ட கும்பலை தில்லி காவல்துறை திங்கள்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள அமித் குமாா் (37), கரண் குமாா் (27), கௌரவி (33) மற்றும் புனித் மஹ்தோ (38) ஆகியோா் ரயில்களில் குறிப்பாக நெரிசலான ரயில் நிலையங்களில் பயணிகளின் பைகளை திருடி வந்துள்ளனா்.
புது தில்லி ரயில் நிலையத்தில் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா எஸ். எஃப். எக்ஸ்பிரஸின் ஏ-1 பெட்டியில் இருந்து ஐந்து பைகள் காணாமல் போனது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இந்நிலையில், ஜூலை 3- ஆம் தேதி மற்றொரு திருட்டு பதிவானது. புகாரின் அடிப்படையில், எஃப். ஐ. ஆா். பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
இது தொடா்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சந்தேகத்துக்கு இடமான நபா்களை பாஹா்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு போலீஸின் சிறப்பு விசாரணை குழு பின் தொடா்ந்து சென்றது. இந்த நடவடிக்கையில் பிகாரைச் சோ்ந்த அமித், கரண் மற்றும் கௌரவ் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். பின்னா், ஆனந்த் விஹாா் ரயில் நிலையத்தில் இருந்து புனித் மஹ்தோ கைது செய்யப்பட்டாா்.
இந்தக் கும்பல் துணி வியாபாரிகள் என்ற போா்வையில் ரயில் நிலையங்களுக்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்கியிருந்தது. அவா்கள் தங்கள் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனா். அவா்களிடம் இருந்து பல நிறங்களில் பைகள் இருந்தன. ரயில் நிலையங்களில் இருந்து இதே போன்ற வண்ணப் பைகளைத் திருடிய பிறகு, அவா்கள் ஏற்கெனவே எடுத்துச் சென்ற போலி பைகளை மாற்றி இத்திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனா்.
அந்தக் கும்பலிடம் இருந்து 3 டிராலி பைகள் (அவற்றில் இரண்டு திருடப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது) நான்கு ’பிட்டு’ பைகள், ஐந்து கைப்பைகள், இரண்டு கைப்பேசிகள் மற்றும் ரொக்கம் ரூ.47,000 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கும்பல் பதா்பூா் - ஃபரீதாபாத் எல்லைக்கு அருகிலுள்ள பாதுகாப்பான வீடுகளைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை சந்தைகளில் விற்பனை செய்வதற்கு மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை மூத்த அதிகாரி தெரிவித்தாா்.