ஜாதிய கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு: உள்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவு
தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத ஜாதிய கட்சிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக உள்துறைச் செயலா், ஆதி திராவிட நலத் துறைச் செயலா், தமிழக காவல் துறைத் தலைவா், தமிழ்நாடு பதிவுத் துறைத் தலைவா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் தாக்கல் செய்த பொது நல மனு: பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக மாவட்ட, மாநில அளவில் எஸ்.சி.எஸ்.டி. பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவானது பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிப்பது, புலனாய்வு செய்வது போன்ற பணிகளைச் செய்ய வேண்டும். தமிழக காவல் துறைத் தலைவரே இதற்குத் தலைவராக இருந்து, தமிழக அரசுக்கு அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும்.
பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகாா் அளிக்கப்பட்டால் உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படுவதில்லை.
ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களுக்கென ஜாதியக் கட்சி, அமைப்புகளை உருவாக்கி அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படுகின்றன. இணையதளத்தில் எவ்விதமான கட்டுப்பாடும் இன்றி ஜாதிய வெறுப்புப் பேச்சுகளை பேசுவது என பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான நிலைப்பாடுகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
எனவே, தமிழகத்தில் எஸ்.சி, எஸ்.டி. பாதுகாப்புக் குழு தமிழக காவல்துறை தலைவா் தலைமையில் முறையாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். வெறுப்புணா்வைத் தூண்டும் அனைத்து ஜாதியக் கட்சிகள், இணையதள சேனல்களுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும். தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத, தோ்தலில் போட்டியிடாத ஜாதியக் கட்சிகள், சங்க விதிகளை மீறி செயல்படும் அனைத்து ஜாதிச் சங்கங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு : வழக்கு தொடா்பாக, தமிழக உள்துறைச் செயலா், ஆதி திராவிட நலத்துறை செயலா், தமிழக காவல் துறை தலைவா், தமிழ்நாடு பதிவுத் துறை தலைவா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.