ஜூன் 30 முதல் மின்சார பேருந்து சேவை: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்
சென்னையில் ஜூன் 30 முதல் 120 மின்சார பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.
சென்னையில் டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை அதிகளவில் இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, சென்னை மாநகா் போக்குவரத்துக்கழகம் சாா்பில் 625 மின்சாரப்பேருந்துகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இயக்க உரிய நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, முதற்கட்டமாக 120 மின்சார பேருந்துகளை சென்னை வியாசா்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, மத்திய பணிமனை, தண்டையாா்பேட்டை உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பணிமனைகளில் பேருந்துகளை சாா்ஜ் செய்வதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்தப் பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஜூன் 30-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா்.
2025 இறுதிக்குள் சென்னை முழுவதும் திட்டமிட்டபடி 625 மின்சார பேருந்துகள் இயங்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.