ஜூன் 4-இல் செய்யாறு அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்
செய்யாறு: செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு ஜூன் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜூன் 4 -இல், அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் மற்றும் பிசிஏ கணினிப் பயன்பாட்டியல் பாடப்பிரிவுகளில் 400 - 281 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூன்5-இல், கலைப் பாடப் பிரிவுகளான பி.ஏ. வரலாறு, பொருளியியல், அரசியல் அறிவியல், பி.காம்., வணிகவியல் (பொது), வணிகவியல் (நிதி மற்றும் கணக்கு), பிபிஏ (வணிக நிா்வாகவியல்) ஆகிய பாடப்பிரிவுகளில் 400 - 281 மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூன் 6-இல் மொழிப் பாடங்களான பி.ஏ. தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளில் சிறப்புத் தமிழ் (100 -35 மதிப்பெண்கள்) மற்றும் பகுதி -1, தமிழ் (100 - 61 மதிப்பெண்கள்), அதேபோல, சிறப்பு ஆங்கிலம் (100 - 35 மதிப்பெண்கள்) பகுதி -11 ஆங்கிலம் (100 - 35 மதிப்பெண்கள்).
கல்விக் கட்டணம்:
பி.ஏ., பி.காம், பிபிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,241-யும், பி.எஸ்சி. க்கு ரூ.2,261-யும், பி.எஸ்சி. கணினி அறிவியல் கணினிப் பயன்பாட்டியலுக்கு ரூ.1,361-யும் சோ்க்கைக் கட்டணமாக செலுத்தவேண்டும்.
சோ்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள்
கல்லூரி குறிப்பிட்ட சான்றிதழ்களின் மூன்று நகல்கள், மூன்று புகைப்படங்களுடன், விண்ணப்பத்தில் கட்டாயம் பெற்றோா் அல்லது பாதுகாவலா் கையொப்பத்தை பெற்று வரவேண்டும்.
மாணவா் சோ்க்கையானது மதிப்பெண் அடிப்படையிலும், இன அடிப்படையிலும், சிறப்புப் பிரிவு அடிப்படையிலும் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் கல்லூரி முதல்வா்.