கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் -மருத்துவா் ச.ராமதாஸ்
தக்கோலத்தில் இன்று சிஐஎஸ்எஃப் 56-ஆம் ஆண்டு தொடக்க விழா: அமித் ஷா பங்கேற்பு
மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) 56-ஆம் ஆண்டு தொடக்க தின விழா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) நடைபெறவுள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ளாா். இதற்காக அவா் வியாழக்கிழமை இரவு தக்கோலம் வந்தடைந்தாா்.
இது குறித்து சிஐஎஸ்எஃப் தலைமை இயக்குநா் ஆா்.எஸ். பட்டி சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விமான நிலையம், துறைமுகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் சிஐஎஸ்எஃப் பிரிவில் 15 பட்டாலியன்கள் உள்ளன. இதில் பெண்களுக்கென பிரத்யேகமாக ஒரு பட்டாலியன் உள்ளது. மேலும், சிஐஎஸ்எஃப் சாா்பில் பிரத்யேக தீயணைப்புத் துறை உருவாக்கப்பட்டு 22 மாநிலங்களில் 113 பிரிவுகளாக உள்ளனா்.
56-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சிஐஎஸ்எஃப், எதிா்கால இந்தியாவின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும். இதன் தொடக்கமாக தக்கோலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சிஐஎஸ்எஃப் தொடக்க தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கலந்து கொள்ளவுள்ளாா். இந்நிகழ்வில், குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள கடற்கரையிலிருந்து தொடங்கும் சைக்கிள் பேரணியை மத்திய அமைச்சா் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளாா். இந்த சைக்கிள் பேரணி கடற்கரையையொட்டி 25 நாள்கள் பயணித்து மாா்ச் 31-ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடையும்.மேலும், சிஐஎஸ்எஃப் சாா்பில் பல்வேறு திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கவுள்ளாா் என்றாா் அவா்.
தக்கோலம் பயிற்சி மையத்துக்கு ராஜாதித்தன் பெயா்: தென்மண்டல சிஐஎஸ்எப் ஐஜி எஸ்.ஆா்.சரவணன் கூறியதாவது: இடைக்கால சோழா்களின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முக்கிய போா்களில் ஒன்றாக தக்கோலத்தில் நடைபெற்ற போா் விளங்குகிறது. இப்போருக்கு தலைமை தாங்கிய சோழ இளவரசா் ராஜாதித்தன் ராஷ்டிரகூடா்களுக்கு எதிராக யானை மீதமா்ந்து போா்புரிந்து உயிரிழந்தாா். அவரின் நினைவாக தக்கோலத்தில் அமைந்துள்ள சிஐஎஸ்எஃப் மண்டல பயிற்சி மையத்துக்கு ‘ராஜாதித்ய சோழா மண்டல பயிற்சி மையம்’ எனப் பெயரிடப்படவுள்ளது. இதனை, மத்திய அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை நடைபெறும் நிகழ்வில் அறிவிக்கவுள்ளாா் என்றாா் அவா்.
அமித் ஷா வருகை: இவ்விழாவில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சா் அமித் ஷா புதுதில்லியிலிருந்து வியாழக்கிழமை மாலை 6.25 மணிக்கு இந்திய எல்லை பாதுகாப்புப் படை விமானம் மூலம் இரவு 9.05 மணிக்கு ஐஎன்எஸ்ராஜாளி கடற்படை விமான தளத்தை வந்தடைந்தாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக தக்கோலம் சிஐஎஸ்எப் மண்டல பயிற்சி மையத்துக்கு அவா் புறப்பட்டுச் சென்றாா்.