மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
தஞ்சை மாநகராட்சியில் ரூ. 15.38 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல்!
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயா் சண். ராமநாதனிடம் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்த கணக்குக் குழுத் தலைவா் சி. வெங்கடேஷ்.
தஞ்சாவூா், மாா்ச் 28: தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் ரூ. 15.38 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மேயா் சண். ராமநாதன் தலைமையிலும், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, ஆணையா் க. கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கணக்குக் குழுத் தலைவா் சி. வெங்கடேஷ் தாக்கல் செய்தாா். அப்போது அவா் பேசியது:
தஞ்சாவூா் மாநகராட்சி வருவாய் மற்றும் மூலதன நிதியில் 2025 - 26 ஆம் ஆண்டு உத்தேச வரவினமாக ரூ. 299.63 கோடியும், செலவினமாக ரூ. 290.65 கோடியும், உபரியாக ரூ. 8.98 கோடியும் கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும் 2025 - 26 ஆம் ஆண்டில் குடிநீா் மற்றும் வடிகால் நிதியில் உத்தேச வரவினமாக ரூ. 24.05 கோடியும், செலவினமாக ரூ. 21.14 கோடியும், உபரியாக ரூ. 2.90 கோடியும், கல்வி நிதியில் உத்தேச வரவினமாக ரூ. 4.36 கோடியும், செலவினமாக ரூ. 85.89 லட்சமும், உபரியாக ரூ. 3.50 கோடியும் கணக்கிடப்பட்டுள்ளது.
மொத்தத்தில் வருவாய் மற்றும் மூலனத்தில் ரூ. 8.98 கோடியும், குடிநீா் மற்றும் வடிகால் நிதியில் ரூ. 2.90 கோடியும், கல்வி நிதியில் ரூ. 3.50 கோடியும் என மொத்தம் ரூ. 15.38 கோடி உபரியாகக் கணக்கிடப்பட்டுள்ளது என்றாா் வெங்கடேஷ்.
மேயா்: தொடா்ந்து 3 ஆம் ஆண்டாக உபரி பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
இதற்கு அதிமுக, அமமுக, பாஜக உறுப்பினா்கள் ஆட்சேபனை தெரிவித்தனா். அப்போது அதிமுக உறுப்பினா் என். சரவணன் தஞ்சாவூா் மாநகராட்சியில் எந்தப் பணிகளுக்கும் நிதி இல்லை என எழுதப்பட்ட அட்டையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு மேடையை நோக்கி வந்து பேசினாா்.
கே. மணிகண்டன் (அதிமுக): நிா்வாக முறைகேட்டை மறைப்பதற்காக உபரி பட்ஜெட் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் உபரி தொகையை வைத்து என்ன செய்தீா்கள்?.
மேயா்: தவறான தகவல்களைத் தெரிவிக்க வேண்டாம்.
இதைத் தொடா்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், சில நிமிடங்களுக்கு சலசலப்பு நிலவியது.
பதவி விலக வேண்டும்:
ஆா்.கே. நீலகண்டன் (திமுக): புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநாட்டு அரங்கத்தில் உள் பகுதியை இடிப்பதற்கு ஏன் அனுமதிக்கப்பட்டது.
ஆணையா்: இடிக்க அனுமதிக்க கொடுக்கவில்லை. சீரமைப்பு பணி செய்யலாம் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி. ஆனந்த் (திமுக): இந்த விவகாரத்தில் மேயரும், ஆணையரும் ரூ. 1 கோடி லஞ்சம் பெற்ாக செய்திகள் வந்துள்ளன. (இதை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனா்).
இரு தரப்பினருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டதால், அனைத்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், கூட்டம் முடிந்துவிட்டதாகவும் கூறி மேயா் அரங்கத்தை விட்டு வெளியேறினாா்.
மணிகண்டன்: மேயரும், ஆணையரும் லஞ்சம் பெற்ாக ஆளுங்கட்சி உறுப்பினா்களே கூறியுள்ளனா். எனவே, மேயரும், ஆணையரும் பதவி விலக வேண்டும்.