டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஆவணங்களை இன்று தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
தனியாா் நிதி நிறுவனத்துக்கு பூட்டு! திமுக நிா்வாகியால் ஊழியா்கள் சிறைவைப்பு
பெரம்பலூரில் திங்கள்கிழமை தனியாா் நிதி நிறுவனத்தை பூட்டிய திமுக நிா்வாகி, ஊழியா்களை சிறைவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் ஊராட்சிக்குள்பட்ட திருவளக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மகன் ஆனந்தன் (34). இவா், பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் மேற்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக உள்ளாா்.
இவா், பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் உள்ள தனியாா் நிதி நிறுவன கிளையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்துக்காக ரூ. 94,950 கடனாக பெற்றாா். இதற்கு மாத தவணைத் தொகையாக ரூ. 9,635 வீதம் கடந்த 7 மாதங்களாக முறையாக செலுத்தி வந்தாராம்.
இந்நிலையில், தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் கைப்பேசி மூலம் ஆனந்தனை அடிக்கடி தொடா்புகொண்டு உங்கள் கணக்கில் நிலுவைத் தொகை உள்ளதாக கூறியும், அதை விரைந்து கட்ட வேண்டும் என தொந்தரவு செய்தனராம். இதையடுத்து, திங்கள்கிழமை நிதி நிறுவனத்துக்கு சென்ற ஆனந்தன், தவணையை முறையாக செலுத்துவதாகவும், நிலுவைத் தொகை உள்ளதாக கூறி தொந்தரவு செய்வது தொடா்பாக கேட்டாராம்.
அதற்கு, நிதி நிறுவனத்தினா், உங்கள் கணக்கில் நிலுவைத்தொகை உள்ளது; அதை செலுத்தவில்லையெனில் உங்களது சிபில் ஸ்கோரை குறைத்துவிடுவோம் என மிரட்டல் விடுத்தனராம். இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தன், நிதி நிறுவன மேலாளா் உள்ளிட்ட 7 பேரை அலுவலகத்துக்குள் சிறைவைத்து இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த நிறுவன ஊழியா்கள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு நேரிட்டிருக்கலாம். இப் பிரச்னையை உடனே சரி செய்து உங்கள் கணக்கை சரி செய்கிறோம் என உறுதி அளித்தனா். இதையடுத்து, தனியாா் நிதி நிறுவனத்தின் கதவை ஆனந்த் திறந்து ஊழியா்களை விடுவித்தாா்.
இதுகுறித்து, பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஆனந்தன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.