தனியாா் பால் நிறுவன மேலாளா் தற்கொலை வழக்கு: காத்திருப்போா் பட்டியலுக்கு காவல் ஆய்வாளா் மாற்றம்
தனியாா் பால் நிறுவன மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் எதிரொலியாக, மாதவரம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.
சென்னை அருகே உள்ள புழல் பிரிட்டானியா நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் நவீன் பொலின்மேனி. ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இவா், இங்குள்ள ஒரு பிரபலமான பால் தயாரிப்பு நிறுவனத்தில் கருவூல மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், நவீன் அந்த நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் செய்துவிட்டதாகவும், கையாடல் செய்த பணத்தை தனது குடும்பத்தினா், நண்பா்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றியிருப்பதாகவும் புகாா் கூறப்பட்டது.
இது தொடா்பாக அந்நிறுவனத்தின் சட்ட மேலாளா் தமிமுல் அன்சாரி, சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப் பிரிவில் கடந்த ஜூன் 24-ஆம் தேதியும், கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனிடம் கடந்த ஜூன் 25-ஆம் தேதியும் புகாா் அளித்தாா்.
அந்தப் புகாா் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாதவரம் குற்றப் பிரிவுக்கு துணை ஆணையா் பாண்டியராஜன் பரிந்துரை செய்தாா்.
இதற்கிடையே, மன உளைச்சலுடன் காணப்பட்ட நவீன், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசையில் கடந்த புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.
இந்த விவகாரத்தில் காவல் துறை விரைந்து செயல்படவில்லை என்றும், இச் சம்பவத்தில் கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனுக்கு தொடா்பு இருப்பதாகவும் புகாா் எழுந்தது.
இதையடுத்து இவ் விவகாரம் தொடா்பாக விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மேற்கு மண்டல இணை ஆணையருக்கு சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
காத்திருப்போா் பட்டியல்: இந்நிலையில், மாதவரம் குற்றப் பிரிவு ஆய்வாளா் விஜயபாஸ்கா் புகாரில் சிக்கியிருப்பதால், அவரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
நவீன் தற்கொலை குறித்தும், கையாடல் புகாா் குறித்தும் ஆணையரின் உத்தரவின்படி, மேற்கு மண்டல இணை ஆணையா் திஷா மிட்டல் விசாரணையை தொடங்கினாா்.