தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு: பாமக பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
தமிழக அரசின் நேரடிக் கடன் வரும் 2026 மாா்ச் 31 நிலவரப்படி ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கக் கூடும் என்று பாமக சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மாா்ச் 14-இல் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும், அதே நாளில் முதல் முறையாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு பாமக சாா்பில் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும். இது 22 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது, பொருளாதார ஆய்வறிக்கையையும் பாமக செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் வரி வருவாய் அதிகரித்திருப்பதால், அதிலிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்ட பங்கு ரூ.49 ஆயிரம் கோடி என்ற இலக்கையும் தாண்டி ரூ.52 ஆயிரம் கோடி கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது, போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் மானியம் ஆகியவற்றால் அரசின் செலவுகள் ரூ.7 ஆயிரம் கோடி வரை உயரும்.
2024-25-இல் வருவாய் பற்றாக்குறையின் அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவான ரூ.49,278 கோடியை விட அதிகரிக்கக்கூடும். 2025-26-இலும் வருவாய்ப் பற்றாக்குறை நீடிக்கும். அந்த ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.50 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக இருக்கும்.
கடன் அதிகரிக்கும்: 2024-25-இல் தமிழக அரசு வாங்கும் மொத்தக் கடன் அளவு ரூ.1.55 லட்சம் கோடியாகவும், நிகரக் கடன் அளவு ரூ.1.05 லட்சம் கோடியாகவும் இருக்கும். 2025-26-இல் தமிழக அரசு வாங்கும் மொத்தக் கடன் அளவு ரூ.1.65 லட்சம் கோடியாக இருக்கும். 2025-26-இல் தமிழக அரசு அதன் கடனுக்கான வட்டியாக மட்டும் குறைந்தது ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரித்திருக்கும். 2026 மாா்ச் 31 நிலவரப்படி தமிழக அரசின் நேரடிக் கடன் ரூ.9.55 லட்சம் கோடியாக இருக்கும். தமிழக அரசின் நேரடிக் கடன் தவிர மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் சாா்பில் வாங்கப்பட்ட கடனின் அளவு ரூ.5.50 லட்சம் கோடியாக உயரக்கூடும். தமிழகத்தின் மொத்தக் கடன் 2025-26-இன் முடிவில் ரூ.15.05 லட்சம் கோடியாக இருக்கும்.
ஒவ்வொருவா் மீதும் ரூ.1,94,695 கடன்: தமிழகத்தின் மக்கள் தொகை இப்போது 7.73 கோடியாக இருப்பதாக வைத்துக் கொண்டால், ஒவ்வொருவா் பெயரிலும் ரூ.1,94,695 கடன் பெறப்பட்டிருக்கும். ஒரு குடும்பத்தில் 4 போ் இருப்பதாக வைத்துக் கொண்டால் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.7.78 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். 2024-25-இல் தமிழகத்தின் பொருளாதார வளா்ச்சி 12 முதல் 14 சதவீதமாக இருக்கும். 2025-26-இல் அதே அளவு பொருளாதார வளா்ச்சி சாத்தியமில்லை. ஆனாலும், தமிழகத்தின் பொருளாதாரம் இரட்டை இலக்க வளா்ச்சியை அடையும். மாநில அரசு நிதி வலிமையை பெருக்கிக்கொள்ள வேண்டுமானால், வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.