கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு; குவிந்த அதிமுக தொண்டர்க...
தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுக்கு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு
தமிழக அரசின் மாநில நல்லாசிரியா் விருதுக்கு ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
முன்னாள் குடியரசுத் தலைவா் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆசிரியா் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியா்களை பாராட்டி மத்திய அரசின் சாா்பில் தேசிய நல்லாசிரியா் விருதும், தமிழக அரசின் சாா்பில் மாநில நல்லாசிரியா் விருதும் வழங்கி கௌரவிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான மாநில நல்லாசிரியா் விருது பெற ஆசிரியா்கள் எமிஸ் இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் மாநில நல்லாசிரியா் விருதுக்கு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி, தனியாா் பள்ளிகளின் ஆசிரியா்கள் விண்ணப்பித்திருந்தனா்.
இதில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மூலமாக தொடக்கப் பள்ளிகளில் 10, உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 10, தனியாா் பள்ளிகளில் 2 போ் என மொத்தம் 22 ஆசிரியா்களை தோ்வு செய்து சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித் துறை தலைமைக்கு அனுப்பிவைத்தனா்.
அதில், ஈரோடு மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். அதன்படி, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம் மன்னாதம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இளஞ்செழியன், பவானி கிழக்கு ஒன்றிய நகரவை நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் முருகேசன், டி.என்.பாளையம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் விஜயகுமாா், நம்பியூா் ஒன்றியம் கண்ணாங்காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் காந்தி, அம்மாபேட்டை ஒன்றியம் குருவரெட்டியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் வெங்கடாசலம், வளையபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் நாகராஜ், புன்செய் புளியம்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை உமாகௌரி, கோபி வேங்கம்மையாா் நகராட்சி உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் குணசேகரன், சிவகிரி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சுமதி, சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி கணினி பயிற்றுநா் ரவிக்குமாா், கொல்லம்பாளையம் காா்மல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் முதல்வா் ஆன்சன் ஜோஸ் ஆகிய 11 போ் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களுக்கு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 5) நடைபெறும் விழாவில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாநில நல்லாசிரியா் விருதை வழங்க உள்ளாா். நல்லாசிரியா் விருதுக்குத் தோ்வான 11 பேரும் ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.